Site icon Tamil News

பிபோர்ஜோய் புயல் தாக்கத்தினால்- பாகிஸ்தானில் இருந்து ஆயிரக்கணக்கில் மக்கள் வெளியேற்றம்

வடகிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டிருக்கும் ‘பிபோர்ஜோய்’ அதிதீவிர புயல் குஜராத்தின் போர்பந்தரில் இருந்து 150 கி.மீ. தொலைவில் இன்று காலை நிலை கொண்டிருந்தது.

இது நாளை (வியாழக்கிழமை) மாலை குஜராத்தின் ஜாக்ஹா துறைமுகப் பகுதியில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதி தீவிர புயல் கரையை கடக்கும் போது பலத்த மழையும், பலத்த காற்றும் வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதன் எதிரொலியால், பாகிஸ்தானில் உள்ள கடற்கரை நகரங்கள் மற்றும் சிறிய தீவுகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பன இடங்களுக்கு தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.

குறிப்பாக பாகிஸ்தானில் உள்ள மூன்று மாவட்டங்களின் ஏழு தாலுகாக்களில் வசிக்கும் 71,380 பேரில் இதுவரை 56,985 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும், 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தாமாக முன்வந்து வெளியேறினர். அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உட்பட பல்வேறு இடங்களில் 37 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.

ஷா பண்டாரின் பல்வேறு கிராமங்களில் இருந்து 700 பேரை ராணுவத்தினர் வெளியேற்றியதாகவும், 64 மீனவர்கள் கடலில் இருந்து மீட்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் கடற்படை தெரிவித்துள்ளது.

பலுசிஸ்தானின் கடலோரப் பகுதிகளிலும், ஹைதராபாத், ஷாஹீத் பெனாசிராபாத், சுக்கூர் மற்றும் சங்கர் உள்ளிட்ட சிந்துவின் கிராமப்புறங்களிலும் கடற்படை அவசரகால பதில் மற்றும் மருத்துவக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

Exit mobile version