Tamil News

தீவிர ரசிகர் மரணம்… வீட்டுக்கே சென்று அஞ்சலி செலுத்தினார் சூர்யா

ரசிகர்கள் மீது அக்கறை காட்டும் நடிகராக சூர்யா இருந்து வருகிறார். அடிக்கடி ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் ஆலோசனை மேற்கொள்வதையும் சூர்யா வழக்கமாக வைத்துள்ளார்.

இதுதவிர ரசிகர்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார் சூர்யா. கடந்த ஜூலை மாதம் நடிகர் சூர்யாவின் பிறந்தநாளுக்காக பேனர் வைத்தபோது ஆந்திராவை சேர்ந்த அவரது ரசிகர்கள் இருவர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அறிந்த சூர்யா சோகத்தில் மூழ்கிப்போனார்.

ரசிகர்களின் மறைவால் அவர் தன்னுடைய பிறந்தநாளையும் கொண்டாடவில்லை என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மறைந்த ரசிகர்களின் குடும்பத்தினரை செல்போனில் தொடர்பு கொண்டு அவர்களுக்கு எந்த உதவியையும் செய்ய தயாராக இருப்பதாக கூறியிருந்தார் சூர்யா.

இந்த நிலையில், தற்போது விபத்தில் மரணமடைந்த தன்னுடைய ரசிகரின் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி இருக்கிறார் சூர்யா.

சூர்யா நற்பணி இயக்கத்தைச் சேர்ந்தவர் அரவிந்த். 24 வயதாகும் இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ந் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார். இதை அறிந்த சூர்யா மனமுடைந்து போனார்.

கங்குவா பட ஷூட்டிங்கில் பிசியாக இருந்ததால் அரவிந்தின் இறுதிச்சடங்கில் சூர்யாவால் கலந்துகொள்ள முடியாமல் போனது. இதனால் தற்போது சென்னை எண்ணூரில் உள்ள அரவிந்தின் வீட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் சூர்யா. அப்போது அவரின் பெற்றோருக்கு சூர்யா ஆறுதல் கூறினார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Exit mobile version