Site icon Tamil News

ஹட்டன் ஜும்மா பள்ளிவாசல் காவலாளியை கொலை செய்த குற்றவாளி கைது

ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் காவலாளியைக் கொலை செய்து உண்டியலை உடைத்து பணத்தை எடுத்துச் சென்ற சந்தேகநபர் சம்மாந்துறை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர் நேற்று (19) இரவு சம்மாந்துறை நகரில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்த வேளையில் கைது செய்யப்பட்டமை குறித்து ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டதாக ஹட்டன் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் ஜயசேன தெரிவித்தார்.

சந்தேகநபர் ஹட்டன் பிரதேசத்தில் பல நாட்களாக தங்கியிருந்து கடந்த 09 ஆம் திகதி அதிகாலை ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் காவலாளியைக் கொன்றுவிட்டு உண்டியலை உடைத்து பணத்தினை எடுத்துச் சென்றுள்ளார்.சந்தேக நபரின் புகைப்படங்கள் ஊடகங்கள் ஊடாக பரப்பப்பட்டதுடன், ஹட்டன் பொலிஸார் அவர் தொடர்பில் நாடளாவிய ரீதியில் உள்ள ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கு அறிவித்தனர்.

சந்தேகநபர் சாய்ந்தமருது, கல்முனை, சம்மாந்துறை ஆகிய பொலிஸ் நிலையங்களில் பல கொலைச் சம்பவங்களுக்காக தேடப்பட்டு வந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், கொலை சம்பம் ஒன்று தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் சிறையிலிருந்து தப்பிச் சென்றவர் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Exit mobile version