Site icon Tamil News

கொழும்பு புறநகரில் திருடனின் செயலால் பறிபோன உயிர்

கையடக்கத் தொலைபேசியைத் திருடிய இரு திருடர்களை துரத்திச் சென்ற கொத்தனார் ஒருவரை திருடன் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளதாக மவுன்ட் தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மொனராகலை நமுனுகுல பிரதேசத்தில் வசித்து வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கே.எம்.தனுஷ்க ருவன் குமார என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

பொருபன பரக்கும் மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றின் வாடி ஒன்றில் நேற்று (28) கொத்தனார்கள் இருவர் உறங்கிக் கொண்டிருந்த போது இந்த திருட்டுச் சம்பம் பதிவாகியுள்ளது.

கொத்தனார்கள் இருவரும் சுமார் 100 மீற்றர் தூரம் வரை துரத்திச் சென்று இரு திருடர்களையும் மடக்கிப் பிடித்துள்ளதுடன், திருடர்களில் ஒருவர் மறைத்து வைத்திருந்த கூரிய கத்தியால் கொத்தனார் ஒருவரின் மார்பில் குத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசியை அந்த இடத்தில் வைத்துவிட்டு திருடர்கள் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

மற்றைய கொத்தனார் இது தொடர்பில் ஒப்பந்ததாரருக்கு தொலைபேசியில் அறிவித்ததையடுத்து அவர் வந்து காயமடைந்த நபரை களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்த போதிலும் அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.

திருட்டில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படலாம் எனவும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version