Site icon Tamil News

பிளாஸ்டிக்கை பார்த்தால் கோபம் வருகிறது

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் கார்பன் சமநிலை குறித்தான கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. கார்பன் நியூட்ரல் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர் மிகச்சிறிய இலக்கு வைத்து இந்த கருத்தரங்கம் நடைபெற்று வருவதாகவும் காலநிலை மாற்ற பாதிப்புகளை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் நவீன தொழில்நுட்பம் பொருளாதார வளர்ச்சி உள்ள மாவட்டமாக கோவை வளர்ந்து வருவதாகவும் கூறினார். இந்தியாவில் காலநிலை மாற்றத்தினால் அதிக பாதிப்பு உள்ள இரண்டு மாநிலம் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா என்றார்.

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த முதலமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மின்சார வாரியம், போக்குவரத்து மற்றும் தொழில்துறை தான் கார்பன்களை அதிகளவில் வெளியிடுகின்றனர் என தெரிவித்த அவர் கார்பன் வெளியேற்றத்தில் அதிக அளவில் வெளியிடும் நாடுகள் சைனா அமெரிக்கா எனவும் நாம் ஐந்தாவது இடத்தில் இருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.

மேலும் கார்பன் சமநிலை என்ற இலக்கை எளிதில் அடைய முடியாது என்றார்.

தங்கள் ஊரில் வெப்பம் 105 டிகிரியை எட்டியுள்ளதாக கூறிய அவர் தனது வாழ்நாளில் இவ்வளவு வெப்பத்தை இதற்கு முன் பார்த்ததில்லை என்றார். ஆண்டுக்கு 10 கோடி மரங்களை நடவு செய்ய இலக்கு வைத்துள்ளோம். ராமேஸ்வரம் மற்றும் ராஜபாளையம் ஆகிய இரண்டு நகராட்சிகள் கார்பன் இலக்கை எட்ட திட்டங்கள் தொடங்கி உள்ளதாகவும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் அடுத்த பணிகளை தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் டெல்டா மண்டலமான ஐந்து மாவட்டங்களில் கார்பன் வெளியேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார். கோவையில் வெள்ளலூர் குப்பை கிடங்கில் பயோ மெட்ரிக் முறைகளை கையாளுவதால் விரைவில் இரண்டு ஏக்கர் நிலம் மீட்கப்படும் என்றார். இளைஞர்கள் நீர் நிலைகள் பாதுகாப்பது குறித்து செயல்பட்டு வருவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்த அவர் அந்த இளைஞர்களை பாராட்ட 100 பேருக்கு தலா ஒரு லட்சம் வீதம் ஒரு கோடி ரூபாய் வரை பரிசு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் எங்காவது பிளாஸ்டிக் பொருட்களை பார்த்தால் கோபம் வருவதாக தெரிவித்த அமைச்சர் அந்த கோபம் ஒவ்வொரு மனிதருக்கும் வர வேண்டும் எனவும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்ற உயிர்களைப் பாதிக்கும் நிலையை உருவாக்கி வருவதாக கூறினார். மேலும் மீண்டும் மஞ்சப்பை என்பது அற்புதமான திட்டம் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு, மேயர் கல்பனா ஆனந்த் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version