Site icon Tamil News

நாடு திரும்பிய நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான தமிழர்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து தமிழர் ஒருவர் பயங்கரவாதப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையிலிருந்து வெளியேறிய – போரினால் பாதிக்கப்பட்ட தமிழரொருவர் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் எனக் கூறப்படும் செல்லப்பாக்கியம் சுதாகரன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலையில் வசித்து வந்த சுதாகரன், 2018ஆம் ஆண்டு இந்தியாவுக்குச் சென்றதாகக் கூறப்படும் நிலையில், அவர் எப்படி இந்தியாவிற்கு சென்றார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. எனினும் இந்தியாவில் தரையிறங்கியவுடன், அவர் இந்திய பொலிஸார் கைது செய்யப்பட்டு, தென்னிந்தியாவின் தமிழ்நாடு, திருச்சியில் உள்ள இலங்கையர்களுக்கான (அகதிகள்) சிறப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டார்.

ஐந்து வருடங்கள் இந்தியாவில் இருந்த அவர், பெப்ரவரி 25ஆம் திகதி இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டார், மேலும் அவர் நாட்டில் காலடி எடுத்து வைத்தவுடன் இலங்கை பாதுகாப்புப் தரப்பினரால் கைது செய்யப்பட்டார்.

சித்திரவதையின் கொடூரமான புலனாய்வு முறைகளுக்காக சர்வதேச அளவில் புகழ்பெற்ற, பிரபலமாக 4ஆவது மாடி என அழைக்கப்படும் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) அவர் அழைத்துச் செல்லப்பட்டதாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை அலுவலகத்தில் அவரது மூத்த சகோதரர் செல்லப்பாக்கியம் உலகேந்திரனிடம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அவர் கிருலப்பனை புட்டானி கட்டிடத்தில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வழங்கிய சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடைபெற்ற வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் சுதாகரன் நாடு கடத்தப்பட்டுள்ளார். சுதாகரன் இதற்கு முன்னர் படகு மூலம் இலங்கைக்கு செல்ல முயன்றபோது இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக அடைத்து வைக்கப்பட்டார்.

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வு பிரிவால் கைது செய்யப்படுவதற்கு முன்பு அவர் இரகசிய விசாரணையாளரால் அவர் விசாரிக்கப்பட்டுள்ளார். சுதாகரன் நாடு கடத்தப்பட்டு இலங்கைக்கு திரும்பிய பின்னர் அவர் பற்றிய எந்த தகவலும் வெளியிடப்படவில்லை என அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் மிகவும் பழமையானது மற்றும் மிருகத்தனமானது எனவும், சிறைக்கைதிகள் பல ஆண்டுகளாக விசாரணைக்கு உட்படுத்தப்படாமலும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படாமல் தடுத்து வைக்கப்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Exit mobile version