Site icon Tamil News

தமிழகத்தில் வேகமாக பரவும் வைரஸ் : தீவிர ஆய்வில் அதிகாரிகள்!

இந்தியா முழுவதும் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து அடுத்தடுத்து பல்வேறு வகை வைரஸ்கள் பரவியபடி உள்ளன. இந்த வைரஸ்கள் கொரோனா வைரசின் திரிபு வைரசான ஒமைக்ரான் வைரசின் புதிய பகுதியாக இருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது.

அடுத்தடுத்த ஆய்வுகள் மூலம் இன்புளூயன்சா வகை வைரஸ்கள் தான் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இன்புளூயன்சா வைரஸ்களில் பல வகைகள் உள்ளன. அதில் எச்.3 என்.2 மற்றும் எச்.1 என்.1 வகையை சேர்ந்த வைரஸ்கள்தான் அதிகம் பரவி இருப்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்தது. நேற்றைய தினம் திருச்சியை சேர்ந்த ஒருவர் பலியாகியிருந்தார்.

சில மாநிலங்களில் அடினோ வைரஸ் என்ற வகை வைரசும் தீவிரமாக பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த வைரஸ்கள் அனைத்தும் இன்புளூயன்சா வைரசின் ஏ வகை பிரிவை சேர்ந்தவை ஆகும். இந்த வைரஸ்கள் பெரும்பாலும் சிறுவர்களையும், முதியவர்களையும் பாதிப்பது தெரியவந்தது.

சளி, இருமல், நுரையீரல் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு, இதய பாதிப்பு போன்றவைகளில் இந்த வைரஸ்கள் தாக்கத்தை ஏற்படுத்தின. இதனால் இந்த 3 வகை வைரஸ்களால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் ஒரு மாதம் வரை கடும் அவதியை சந்திக்க நேரிட்டது.

குறிப்பாக நீரிழிவு நோய், இதய நோய் இருப்பவர்களை இந்த வைரஸ்கள் தாக்கினால் கூடுதல் பாதிப்பு ஏற்படுவது ஆய்வுகளில் தெரியவந்தது. இதையடுத்து மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் தீவிர ஆராய்ச்சி நடத்தியது. அதில் பெரும்பாலான மாநிலங்களில் 25 சதவீதம் அடினோ வைரஸ் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சுமார் 70 சதவீதம் பேரை எச்.3 என்.2 வகை வைரஸ் தாக்குவது தெரிய வந்தது. இந்த வைரசால் தாக்கப்பட்டவர்களில் சுமார் 3 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெரும் வகையில் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நிலை இருந்தது.

இதனால் இந்த வைரஸ்களை கண்டு பெரும்பாலானவர்கள் அச்சப்படாமல் தொடர்ந்து பணிகளில் செயலாற்றி வருகின்றனர். இந்த வைரசை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version