Site icon Tamil News

இலங்கையில் அதிர்ச்சி – தந்தையை அடித்துக் கொன்ற சிறுவன்

இலங்கையில் 16 வயது மகன் தாக்கியதில் படுகாயமடைந்த அவரது 46 வயது தந்தை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் பொலனறுவை – வேவதென்ன பகுதியில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்த நபர் மதுபோதையில் வந்து தனது மனைவியை இரும்புக் கம்பியால் தாக்குவதற்கு முற்பட்டபோது அவரின் மகனும் மகளும் தலையிட்டுத் தடுப்பதற்கு முயற்சித்த போது அவர்களையும் தாக்கியுள்ளதால் ஆத்திரமுற்ற மகன் தந்தையிடம் இருந்த இரும்புக் கம்பியைப் பறித்துத் தாக்கினார் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பொலனறுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரைப் பொலனறுவைப் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version