Tamil News

விசாரணைக்குப் பின் மீண்டும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட யூடியூபர் பெலிக்ஸ்ஜெரால்ட்

காவல்துறையினர் விசாரணைக்கு பின்பு பெலிக்ஸ்ஜெரால்ட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

தமிழக காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்களை அவதூறு பேசியதாக சவுக்குசங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை தேனியில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறை அடைக்கப்பட்டார். மேலும் அவர் குட்ட சட்டத்தில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

சவுக்குசங்கர் நேர்காணலை ஒளிபரப்பு செய்த redpix ஆசிரியர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் தனிப்படை ஆய்வாளர் வீரமணி தலைமையிலான காவல்துறையினர் டெல்லியில் 10ஆம் திகதி இரவு பெலிக்ஸ்ஜெரால்டை கைது செய்தனர். தொடர்ந்து அவரை 13ஆம் திகதி திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.இதனை தொடர்ந்து அவரை திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா முன்பு அஜர்படுத்தப்பட்டார்.தொடர்ந்து 27.5.24 வரை நீதிமன்ற காவலுக்கு உத்தரவிட்டார்.

YouTube journalist Felix Gerald arrested by Tamil Nadu police

இந்நிலையில் நேற்று பெலிக்ஸ் ஜெரால்டை விசாரணைக்காக காவல்துறையினர் திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா முன்னிலையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. காவல்துறை தரப்பில் 7நாள் கஸ்டடி கேட்கப்பட்ட நிலையில் நீதிபதி ஒரு நாள் காவல்துறையினர் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். மீண்டும் இன்று மாலை 3 மணி அளவில் அவரை நேரில் ஆஜர் படுத்த உத்தரவிட்டார்.

ஒரு நாள் விசாரணை முடிந்த பின்னர் இன்று மதியம் திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயப்பிரதா முன்னிலையில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.

நீதிபதியிடம் காவல்துறையினரின் விசாரணையில் இருந்த பொழுது விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக இரு தரப்பினரும் தெரிவித்தனர். இதனையடுத்து ஏற்கனவே 27ம் திகதி வரை விதிக்கப்பட்ட நீதிமன்ற காவலின்படி அவர் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தொடர்ந்து செய்தியாளுக்கு பேட்டியளித்த பெலிக்ஸ் ஜெரால்டின் வழக்கறிஞர் கென்னடி,நேற்று காவல்துறையில் கஸ்டடி எடுக்கும் போது அவருடைய பாதுகாப்பு மிக முக்கியம் என கோரிக்கை வைத்திருந்தோம் அவரை மூன்றாம் தர மனிதராக மோசமான நடவடிக்கைகள் ஈடுபடுத்தக் கூடாது என கோரிக்கை வைத்திருந்தோம் மேலும் அவரது பாதுகாப்பை விசாரணை அதிகாரி உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்து இருந்தோம்.அதன்படி எந்தவிதமான துன்புறுத்தல் இல்லாமல் இன்று மருத்துவ சான்றிதழ் உடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக தெரிவித்துள்ளோம். விசாரணைக்கு கைது செய்தனர் அதற்கான விசாரணையும் மேற்கொண்டனர். எனவே விசாரணை முடிந்து விட்டது என்று தான் அர்த்தம்.எனவே, பெயில் கொடுப்பதற்கான எந்த நிபந்தனையும் இருக்காது.பெயில் தொடர்பான மனு நாளை நீதிமன்றத்திற்கு வரவுள்ளது.அவருடைய வீட்டு பத்திரங்களை காவல்துறையில் எடுத்து வந்திருக்கிறார்கள். அதற்கான மனுவை நாளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளோம்.வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஒளிபரப்பு கருவிகளை மட்டும் தான் கேட்டிருந்தனர். அதற்கு மாறாக இதை செய்துள்ளனர்.நாளை இதற்கான மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளோம் என தெரிவித்தார்.

Exit mobile version