Site icon Tamil News

எங்களுடைய உரிமைக்காகவும், இருப்புக்காகவும் நாம் இறுக்கமாக இருந்தால் முன்னேற்றத்தை அடையலாம்! கஜேந்திரகுமார் எம்பி.

அநியாயம் நடக்கும் போது நாம் துணிந்து எங்களுடைய உரிமைக்காகவும், இருப்புக்காகவும் நாம் இறுக்கமாக இருந்தால் எமக்கான முன்னேற்றத்தை அடையலாம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியிலே அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை உள்ளிட்ட கட்டுமான பணிகள் தொடர்பிலான வழக்கின் கட்டளை இன்றையதினம் வழங்கப்பட்டிருந்தது.

வழக்கின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினருக்கும் , மக்களுக்கும் விஷேடமாக குருந்தூர்மலை சம்பந்தமாக நீதிமன்றிலே குருந்தூர்மலை விகாரை நிர்வாகத்தின் கோரிக்கைக்கு அமைவாக வாதாடிய சட்டதரணிகளுக்கும் தமிழினம் உண்மையில் கடமைப்பட்டிருக்கின்றது.

குறித்த நேரத்திலே தமிழ்மக்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு தமிழ்த் தேசத்தினுடைய சரித்திரம் மாற்றப்படும் ஒரு முயற்சி முன்னெடுக்கப்பட்ட நிலையிலையே நெருக்கடிகளின் மத்தியில் அந்த முயற்சியை முறியடிப்பதற்காக நீதிமன்றத்தை கையாண்டு மிக திறமையாக இந்த அநியாயத்தை முதல் தரம் பதிவு செய்தது மட்டுமல்ல அடுத்தகட்டமாக உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில் நடந்துகொண்டமை மக்களுக்கும் , ஆலய நிர்வாகத்தினருக்கும் ஒரு பலத்தை, வெற்றியை கொடுத்துள்ளது.

நடக்கும் கலாசார இன அழிப்பின் முக்கிய அங்கத்தை ஸ்ரீலங்கவின் நீதிமன்றின் நீதவானுடைய தீர்ப்பினூடாக பதிவு செய்யப்பட்டதாகவே நாம் கூறவேண்டும்.

இது எதனைசுட்டி காட்டுகின்றது எனில் எங்களுக்கு அநியாயம் நடக்கும் போது நாம் துணிந்து எங்களுடைய உரிமைக்காகவும், இருப்புக்காகவும் நாம் இறுக்கமாக இருந்தால் எமக்கான முன்னேற்றத்தை அடையலாம்.
எங்கள் அழிவை மட்டுப்படுத்தப்பட்ட வகையில் குறைக்கலாம் என்ற யதார்த்தத்தை இது எடுத்து காட்டுகின்றது.

Exit mobile version