Site icon Tamil News

நாம் நிதிக்காக போராடவில்லை நீதிக்காகவே போராடுகின்றோம்: சிவானந்தம் ஜெனிற்றா

நாம் நிதிக்காக போராடவில்லை. நீதிக்காகவே போராடுகின்றோம் என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி சிவானந்தம் ஜெனிற்றா தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (15.11.2023) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

” தற்போதைய ஜனாதிபதியினால் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டில் காணாமல் போனோருக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

1500 மில்லியன் நிதியினை இழப்பீடாக வழங்குகின்றார்கள் என்றால் உண்மையாகவே காணாமல் போனோர் என்றால் குளம், கோயில் போய் காணாமல் போயிருக்கலாம், யுத்தத்தில் காணாமல் போயிருக்கலாம் இவ்வாறு பல வழிகளில் காணாமல் போயிருக்கலாம் இவர்களே காணாமல் போனவர்கள். என்ன நடந்தது என தெரியாத நிலையிலையே இவர்கள் காணாமல் போயிருக்கிறார்கள்.

ஆனால் நாங்கள் வலுக்கட்டாயமாக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள். இறுதி யுத்தம் முடிவடைந்த பின்பு தாமாக சரணடைந்தவர்கள், கையில் ஒப்படைக்கப்பட்டவர்கள், இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் வைத்து கடத்தி செல்லப்பட்டவர்களும் எனவே இந்த அரசு இராணுவம் தவிர்ந்த வேறு யாருமே கடத்தி செல்லவில்லை.

இந்த இலங்கை அரசிடம் தமிழ் உறவுகளுக்கு நடந்த அநீதிகளுக்கு நீதி கேட்டு போராடி கொண்டிருக்கின்றோம். ஆனால் உண்மையாகவே குற்றம் செய்தவர்களிடம் நாம் நீதி கேட்பது, நீதி கிடைக்காததனால் தன் குற்றத்தை தானே ஒப்புக்கொள்வார்களா? எனும் ரீதியிலே தான் நாம் சர்வதேச நீதியை வேண்டி போராடிக்கொண்டு இருக்கின்றோம்.

எனவே சர்வதேசத்திடம் நாம் இதுவரை எமது உறவுகள் எங்கே? என்ன செய்தார்கள் என்பதற்கு இலங்கை அரசுக்கு உண்மையாக தண்டனையை பெற்றுக்கொடுக்க வேண்டும். எமக்கான நீதி சரியாக கிடைக்கப்பெற வேண்டும் என்பதற்காகவே நாம் போராடிக் கொண்டிருக்கின்றோம்.

எனவே நாம் இலங்கை அரசிடம் வாழ்வதற்கோ, எமக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்கோ இவர்களிடம் நிதியை கேட்டு, இழப்பீட்டை வழங்குங்கள் என கேட்டு போராடவில்லை. நாம் இதுவரை நிதிக்காக போராடவில்லை. நீதிக்காகவே போராடுகின்றோம். சாதாரணமாக ஒரு நீதி துறையின் சட்டத்தை எடுத்து பார்த்தால் கூட ஒரு நபர் வீதியில் விபத்திற்குள்ளானால் விபத்திற்கு உள்ளானவருக்கு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து அவர்களுக்கான நீதி வழங்கப்பட்ட பின்னரே அவர்களுக்கான இழப்பீட்டை பெற்று கொடுப்பார்கள்.

இதே ஒரு சாதாரண விடயத்திற்கு நடக்கின்றது. உண்மையிலே இந்த இலங்கை அரசானது மிகவும் மோசமான நிலையிலே கையிலே ஒப்படைக்கப்பட்ட, தாமாகவே சரணடைந்த உறவுகளுக்கு என்ன நடந்தது என ஒரு பதிலை சொல்ல முடியாது அவர்களுக்கான இழப்பீடுகளை கொடுத்து அவர்களை நீதிக்காக போராடும் எமது போராட்டத்தை நீத்து போகும் செயலாக மாற்றுவதற்கு முனைகின்றார்கள்.

வடக்கு கிழக்கு இணைந்து உறவுகளாகிய நாம் இந்த நிதி ஒதுக்கீட்டில் எமக்கான நிதியினை ஒதுக்கீடு செய்வதாக கூறி எமது உறவுகளை அவல நிலைக்கு தள்ளப்பட்டு சர்வதேசத்திடம் அதற்கான நிதியினை பெற்று அந்த பணத்தினை வேறு தேவைக்கு பயன்படுத்துவதற்காக அந்த நிதியினை வாங்குகின்றார்கள் எனில் யாருக்கு பயன்படுத்த போகின்றார்கள். அந்த நிதியினை நாம் முற்றாக புறக்கணிக்கின்றோம். பாராளுமன்ற உறுப்பினர்களும் எமது உறவுகளுக்கு நீதியினையே பெற்று தர முன்வர வேண்டும்.

உறவுகளை ஏமாற்றாதீர்கள். சர்வதேசத்திடம் ஒன்றினை கூறிக்கொள்கின்றோம். 14 வருடங்கள் கடந்தும் நீதிக்காக தான் போராடி கொண்டிருக்கின்றார்கள். எமக்கான இழப்பீடுகளோ , எந்தவித உதவிகளோ தேவையில்லை என்பதையும் நாம் இறப்பதற்கு முன் எமக்கான நீதியை பெற்று தாருங்கள் என்பதனையும் ஆணித்தரமாக கூறிக்கொள்கின்றோம்” என்றுள்ளது.

 

 

Exit mobile version