Site icon Tamil News

தண்ணீரே உலகின் முதன்மையான மருந்து – பல நோய்களை தீர்க்கும்

மனிதனுக்கு சுத்தமான தண்ணீரே உலகின் முதன்மையான மருந்து. பெரும்பாலான மக்கள் ஒவ்வொரு நோய்க்கும் மாத்திரைகள், ஊசி தேவை என்று எண்ணுகிறார்கள். ஆனால், மாத்திரை, மருந்து இல்லாத மருத்துவம் என்றால் அது நமக்கு இறைவன் அளித்துள்ள குடிநீரே ஆகும்.

இந்த உலகில் எல்லா பகுதிகளிலும் மனிதனுக்குக் குடிப்பதற்கு குடிநீர் கிடைக்கிறது. இந்தத் தண்ணீரின் மகத்துவம் பல அரிய நோய்களையும் குணப்படுத்த வல்லது. கொதிக்க வைத்து வடிகட்டிப் பருகும் சுத்தமான நீர் ஓர் அருமருந்து.

காலையில் எழுந்தவுடனே வெறும் வயிற்றில் 1.26 லிட்டர் தண்ணீரை முழுவதும் குடித்துவிட்டால், பல வியாதிகள் பறந்து ஓடிவிடும்.

மலச்சிக்கல் என்பதே இருக்காது. மூலம், பெளத்திரம் நோய்கள் அருகில் வருவதற்கக்கூட அஞ்சும். ஏற்கெனவே இந்நோய் உள்ளவர்களானால் நோய் சிறகடித்துப் பறந்துவிடும். இன்று உலகில் சிறுவர்கள் முதல் பெரியவர் கள் வரை உள்ள பிரச்னை மலச்சிக்கல்தான். இந்த மலச்சிக்கல்தான் பலவிதமான நோய்களுக்கு அடிப்படை ஆதாரம். காலையில் நீர் உட்கொள்பவர்கள், மலமிளக்கிக்கும் வயிற்றில் உள்ள பூச்சிக்கும் மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.

நம்மில் எத்தனை பேர் ஒரு நாள் முழுவதும்கூட 1.26 லிட்டர் நீர் பருகுகிறார்கள்? நம்மில் நீர் அருந்துவது குறைவு.

சர்க்கரை நோய் என்பது இப்போது எல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது. இந்த சர்க்கரை நோய் வியாதியஸ்தர்கள், தினம் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 1.26 லிட்டர் நீர் பருகும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால், கணையத்தில் உள்ள சுரப்பிகள் அனைத்தும் நன்கு இயங்கும். சிறு நீரகங்கள் சுறுசுறுப்பாய் வேலை செய்யும். இன்சுலின் சுரப்பது அதிகரிக்கும். சர்க்கரை வியாதி குறையும்.

ரத்தத்தில் உப்புச் சத்து அதிகம் உள்ளவர்களுக்கு இந்த நீர் வைத்தியம் கைகண்ட மருந்து. ரத்தத்தில் உப்பு உள்ளவர்கள், காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 1.26 லிட்டர் நீரைத் தொடர்ந்து ஒரு மாதம் பருகி வந்து பின் உப்பின் அளவை பரிசோதித்தால் ஆச்சரியப்படும் அளவிற்கு உப்பு குறைந்து இருக்கும். சிறுநீரகங்கள் சுறுசுறுப்பாய் இயங்கும்.

நிறைய தைராய்டு மாத்திரைகள் உட்கொண்டவர்களும் இந்த நீர் பருகும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் ஸ்டீராய்டு மாத்திரைகளால் ஏற்படும் பக்க விளைவுகளின்றும், நோய்களிலிருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

இந்தத் தூய்மையான தண்ணீர் அருந்தும் முறையினால் முப்பது நோய்களைத் தடுக்கலாம். நீர் வைத்தியத்தால் தலைவலி, சோகை, பொதுவான பக்கவாதம், மூட்டு வலி, இதயப் படபடப்பு, இருமல், சளி, சிறு நீரகக் குழாய் நோய்கள், வாய்வு, வயிற்றுப் பொருமல், வயிற்றோட்டம், மலச்சிக்கல், சர்க்கரை வியாதி, கண் சிவப்பு, ஒழுங்கற்ற மாத விடாய் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

தூய்மையான குடிநீரினால் குடல் சுத்தமாக வைக்கப் படுவதால் உடலில் இரத்தம் அதிகமாகிறது. ரத்த ஓட்டம் சீரானதாக வைக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

தூய்மையான குடிநீர் 1.26 லிட்டர் அருந்துவதற்கு பயிற்சி.

1. முதல் நாள் இரவு பல்லைத் துலக்கிவிட்டு படுத்து, காலையில் வெறும் வயிற்றில் நீரைப் பருக வேண்டும்.

2. நாம் பருகும் நீர் அவசியம் கொதிக்க வைத்து ஆறிய தூய்மையான தண்ணீராக இருக்க வேண்டும்.

3. ஆரம்பத்தில் ஒரே மூச்சாய் குடிக்க சிரமமாயிருக்கும். பின்பு பழகப் பழக சரியாகிவிடும்.

4. நமக்கு எளிதான வழி 1.5 லிட்டர் தண்ணீர் பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் இரவு தண்ணீரை நிரப்பி வைத்துவிட வேண்டும்.

5. முதல் வாரத்தில் கால்பாட்டில் நீர் அருந்தினால் போதமானது.

6. இரண்டாவது வாரம் முழுவதும் அரைபாட்டில் நீர் அருந்தும் அளவுக்கு நம்மைப் பழகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

7. மூன்றாவது வாரம் முக்கால் பாட்டில் நீர் அருந்த நம்மை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

8. நான்காவது வாரத்தில் ஒரு பாட்டில் நீர் தாராளமாக நாமே அருந்தி விடுவோம்.

9. இந்த முறையைப் பழக்கப்படுத்தும்போது ஒருநாள் கூட தவற விடுாமல் செய்து வந்தால் நீர் அருந்துவது சுலபமாக பழகிவிடும்.

10. ஒரு மாத பயிற்சிக்குப் பின் தொடர்ந்து மூன்று மாதங்கள் நீர் அருந்தினால், தீராத வியாதிகளும் தீரும் நிலையை நம் கண் முன்னால் காணலாம். மாத்திரை, ஊசிகளால் ஏற்படும் பக்க விளைவுகளோ, பாதிப்புகளோ இந்த சிகிச்சையில் இல்லை.

நாம் வெளியூர் சென்றால்கூட எளிதாக பின்பற்றக்கூடிய சிகிச்சைதான். இதில் முக்கியமான ஒரு விஷயம் நாம் குடிக்கும் நீர் சுத்தமானதாய் இருக்க வேண்டும். நீர் அருந்திய ஒரு மணி நேரத்திற்குக் காப்பி, டீ, வேறு உணவுகள் வயிற்றுக்குள் நாம் அனுமதிக்கக் கூடாது. பணம், காசு, நேரம் செலவில்லாத வைத்தியம்தானே.

நன்றி – கல்கி

Exit mobile version