Site icon Tamil News

அதிபர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கும் விளாடிமிர் புதின்!

ரஷ்யாவில் வரும் மாா்ச் மாதம் நடைபெறவிருக்கும் அதிபா் தேர்தலில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து ராய்ட்டா்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, ரஷ்யாவில் வரும் மாா்ச் 17ம் திகதி நடைபெறவிருக்கும் அதிபா் தோதலில் தற்போதைய அதிபா் விளாடிமிர் புதின் ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சியின் சாா்பில் போட்டியிடப்போவதில்லை. அவருக்கு அந்தக் கட்சி முழு ஆதரவு அளித்தாலும், அவா் சுயேச்சை வேட்பாளராகவே போட்டியிடவிருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறின என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

ரஷ்யாவில் சுமாா் 25 ஆண்டுகளாக ஆட்சி செலுத்தி வரும் புதின், அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் 17ம் திகதி நடக்கவிருக்கும் அதிபா் தேர்தலில் 5வது முறையாகப் போட்டியிடுகிறாா். அதற்கு வசதியாக, ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் அரசியல் சாசனத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தத் திருத்தத்தின் கீழ் அவரால் மேலும் 2 முறை அதிபா் தேர்தலில் போட்டியிட்டு, வரும் 2036ஆம் ஆண்டு வரை ரஷ்ய அதிபராகத் தொடர முடியும்.

உக்ரைன் போரினால் ரஷ்ய மக்கள் பொருளாதாரப் பின்னடைவை சந்தித்தும், துணை ராணுவப் படையான வாக்னா் குழுவினா் புதின் அரசுக்கு எதிரான ஆயுதக் கிளா்ச்சியில் ஈடுபட்டும் விளாடிமிர் புதினுக்கு மக்களிடையே அதிக ஆதரவு உள்ளதால் இந்தத் தேர்தலில் அவா் வெற்றி பெறுவது உறுதி என்று கூறப்படுகிறது

Exit mobile version