Site icon Tamil News

எம்ஜிஆருக்கு அடுத்து விஜய்? – ரசிகர்களின் போஸ்டரால் பரபரப்பான மதுரை!

எம்.ஜி.ஆரைப் போல் விஜயும் அரசியலில் நம்பர் 1 ஆக வர வேண்டும் என விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகராக இருப்பவர் விஜய். தென்னிந்திய சினிமாவிலேயே கலெக்‌ஷன் கிங் என்றும், அதிகம் சம்பளம் வாங்கக்கூடிய நடிகர் என்றும் புகழப்படுகிறார். தயாரிப்பாளர்கள் முதல் விநியோகஸ்தர்க்ள், தியேட்டர் உரிமையாளர்கள் எனப் பலராலும் விரும்பப்படும் கதாநாயகனாக விஜய் இருக்கிறார். அதேபோல், ரசிகர்களால் தளபதி என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். தமிழகத்தில் அதிகளவில் ரசிகர்களைக் கொண்ட நடிகரும் இவர் தான்.

இந்நிலையில், விஜய் கடந்த 2ம் திகதி அரசியல் கட்சி தொடங்கியதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி கட்சிக்குத் தமிழக வெற்றி கழகம் எனப் பெயரிட்டுள்ள அவர், விரைவில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் பட்டியலையும் வெளியிட உள்ளார். மேலும், தனது 69வது படத்துடன் திரைப்படத்துறையில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

திரைப்படத்துறையில் இருந்து விலக உள்ளதாக அவர் அறிவித்துள்ளது தமிழ் சினிமா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவரது வருகைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல், அவரது ரசிகர்கள் விஜயின் அரசியல் வருகையைக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் பலரது கவனத்தை ஈர்த்துப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த போஸ்டரில், “அன்று சினிமாவில் நம்பர் 1 ஆக இருந்து, அரசியல் பயணம் தொடங்கியவர் எம்ஜிஆர். இன்று சினிமாவில் நம்பர் 1 ஆக இருந்து, அரசியல் பயணம் தொடங்குபவர் எங்கள் தளபதியார். உன் முதல் அரசியல் வெற்றியைப் பதிவு செய்ய அழைக்கிறது மதுரை. வா தலைவா, நீ மதுரையில் நின்று வென்று ஆட்சியமைக்க அழைக்கிறோம்” என அந்த போஸ்டரில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.

அரசியலோ, சினிமாவோ போஸ்டர் அடித்துக் கலக்குவதில் மதுரைக்காரர்களுக்கு இணை இல்லை என்பதை மீண்டும் மதுரை விஜய் ரசிகர்கள் நிரூபித்துள்ளனர்.

Exit mobile version