Tamil News

ஆபத்தான நிலையில் உள்ள வட்டுவாகல் பாலம் : மக்கள் விடுத்துள்ள கோரிக்கை!

முல்லைத்தீவு நகரத்திற்கான பிரதான பாதைகளில் ஒன்றாக காணப்படுகின்ற ஏ-35 தர வீதியின் வட்டுவாகல் பாலமானது எந்தவித புனரமைப்புக்களுமின்றி மிக மோசமாக சேதமடைந்து காணப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த பாலமானது சேதமடையும் பொழுது தற்காலிகமாக புனரமைக்கப்பட்டு வருகின்றதே தவிர   நிரந்தர புனரமைப்புகள் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது பாலத்தின் மையப்பகுதியில் பாரிய உடைவு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் பாரிய குழியும் காணப்படுகின்றது.

அத்துடன் குறித்த பாலத்தின் பல்வேறு இடங்களில் வெடிப்புகளும், பாதுகாப்பு அற்றதாகவும், சில பகுதிகள் தாழிறங்கியும் காணப்படுகிறது.  இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலதடவைகள் எடுத்து கூறியும் புனரமைப்பு பணிகள் எவையும் நடைபெறவில்லை.

தற்போது மழையுடன் கூடிய காலமாகையால் நீர்மட்டம் உயர்ந்து பாலத்தை மேவி செல்வதோடு, கனரக வாகனங்களும் இதன் ஊடாக செல்லும் போது மேலும் உடைவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும்
பல விபத்துகள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும் பிரதேசவாசிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு மழைகாலங்களிலும் குறித்த பாலம் இவ்வாறான நிலைமைக்கு செல்வதோடு ஆபத்தான முறையில் பிரயாணிகள் பயணம் செய்யவேண்டிய நிலையும் காணப்படுவதாகவும், குறித்த பாலத்தினை சீரமைத்து தருமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version