Site icon Tamil News

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் வெற்றிடம் ஒரு மாதத்திற்கு மேலாக காணப்படுகின்ற நிலையில் உடனடியாக அரச அதிபர் ஒருவரை நியமிக்குமாறு கோரி மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் இன்று புதன்கிழமை (4) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,

”மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் வெற்றிடம் ஒரு மாதத்திற்கு மேலாக காணப்படுகிறது. மாவட்டத்தில் பல்வேறு விதமான பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன.

குறிப்பாக பெரும்போகம் விவசாய நடவடிக்கைகள் தொடங்கவுள்ளதால் விவசாய நடவடிக்கைகள் தொடர்பாக பல பிரச்சினைகள் காணப்படுவதுடன் மாவட்ட ரீதியாகவும் பல விடயங்களுக்கு தீர்மானம் எடுப்பதில் பல்வேறு தாமதங்கள் ஏற்படுகிறது.

கடந்த காலத்தைப் போல் அல்லாமல் வலிமையான, ஆளுமையுள்ள,செயல் திறனுள்ள, வல்லமையயுள்ள ஒருவரை மதவாதம், அடிப்படைவாதம், அரசியல் நோக்கு நிலை வாதம் கடந்து நிர்ணய நிலையில் உள்ள சமூக சம நீதியை பின்பற்றக்கூடிய ஒருவரை மிக மிக விரைவாக நியமிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் காணி விடுவிப்பு உட்பட அரசியல் தீர்மானங்கள் யாவும் எமது மாவட்டத்தில் ஒழுங்காக நிகழ்வதில்லை.

மிகப் பலவீனமான அரசியல் தலைவர்கள் உள்ளதால் நிர்வாகத் தலைமைக்கு ஆவது ஆளுமையுள்ள ஒருவரை நியமிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version