Site icon Tamil News

திருப்பூர் – வயலில் புற்களுக்கு தீ வைத்த விவசாயி… அதே நெருப்பில் சிக்கி பலியான சோகம்!

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே காய்ந்த புற்களுக்கு தீ வைத்த விவசாயி தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பெருங்களூர் வாய்க்கால் மேடு பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவர் தனது தோட்டத்தில் மூன்றடி உயரத்திற்கு புற்கள் வளர்ந்து, புதற்போல மண்டி கிடந்ததால் அவற்றிற்கு இன்று தீ வைத்துள்ளார். அப்போது காற்று பலமாக வீசியதால் காய்ந்த சருகுகள் மீது பட்டு தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு வேகமாக எரிந்தது. இதனால் விவசாயி ஆறுமுகம் தீயின் நடுவில் சிக்கி வெளியேற முடியாமல் மயங்கி விழுந்து உடல் கருகி உயிரிழந்தார்.

இந்த நிலையில் தோட்டத்துக்கு சென்ற கணவர் ஆறுமுகம் வெகுநேரமாகியும் வராததால், ஆறுமுகத்தின் மனைவி அவரை பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் போனை எடுக்காததால், அச்சமடைந்து அவரை அழைத்து வரச்சொல்லி தனது மருமகளை தோட்டத்துக்கு அனுப்பியுள்ளார். அப்போது மாமனார் தீயில் உடல் கருகி உயிரிழந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்த மருமகள், உடனடியாக குடும்பத்தாருக்கு தகவல் அளித்தார்.

இதுகுறித்து அவிநாசி பாளையம் பொலிஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பொலிஸார் ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து அவிநாசி பாளையம் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version