Tamil News

இரண்டு நாட்களாக பூட்டிய வீட்டில் பிணமாக கிடந்த பிரபல நடிகர்! அதிர்ச்சியில் திரையுலகம்

பல படங்களில் நடித்துள்ள, நடிகர் பிரதீப் கே விஜயன் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம், கோலிவுட் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘சொன்னா புரியாது’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் பிரதீப் கே விஜயன். அதிக உடல் பருமனோடு இருப்பதால் பல படங்களில், காமெடி கலந்த குணச்சித்திர வேடத்திலேயே நடிக்க இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து இவர் நடித்த தெகிடி திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. பின்னர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஒரு நாள் கூத்து, என்னோடு விளையாடு, மீசைய முறுக்கு, மேயாத மான், நெஞ்சில் துணிவிருந்தால், திருட்டு பயலே 2, சங்கு சக்கரம், இரும்புத்திரை, ஆடை, கென்னடி கிளப், ஹீரோ, மனம், உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். கடைசியாக நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ‘ருத்ரன்’ படத்தில் நடித்திருந்தார்.

இவர் சென்னை பாலவாக்கத்தில் தனியாக ரூம் எடுத்து வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இவருக்கு அவரின் நண்பர்கள் கடந்த இரண்டு நாட்களாக போனில் பேச முயற்சி செய்தபோது, அவர் போனை எடுத்து பதிலளிக்கவில்லை. பின்னர் வீட்டுக்கு இவரை தேடி வந்தவர்கள் கதவு உள் பக்கம் பூட்டப்பட்டு இருந்ததாலும், துர்நாற்றம் வருவது போல் இருந்ததாலும் இது குறித்து காவல்துறைக்கு புகார் அளித்தனர்.

பின்னர் அங்கு வந்த காவல் துறையினர் கதவை உடைத்து சென்று உள்ளே போய் பார்த்தபோது இறந்த நிலையில் பிரதீப் கே விஜயன் கிடந்துள்ளார்.

இவர் மாரடைப்பு காரணமாக இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அதே போல் வேறு ஏதாவது பிரச்சனைக்காக அவர் மருந்துகள் உட்கொண்டாரா என்று எந்த தகவலும் தெரியவில்லை. இவரது உடலை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version