Tamil News

லியோ படத்தின் சிறப்பு காட்சிக்கு கிரீன் சிக்னல் காட்டிய தமிழக அரசு…

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படம் வருகிற அக்டோபர் 19-ந் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸானால் அதற்கு அதிகாலை 4 மணி காட்சி திரையிடப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படமும், அஜித்தின் துணிவு படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆன போது, ரசிகர்கள் மத்தியில் மோதல் ஏற்பட்டது. இந்த கொண்டாட்டத்தின் போது லாரியின் மீது ஏறி நடனமாடிய அஜித் ரசிகர் ஒருவர் தவறி விழுந்து மரணமடைந்தார்..

இச்சம்பவத்தை அடுத்து தமிழகத்தில் அதிகாலை காட்சிகள் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டது. இதனால் கடந்த 9 மாதங்களாக எந்த படத்திற்கும் அதிகாலை காட்சிகளை திரையிட அனுமதி வழங்கப்படவில்லை.

ரஜினியின் ஜெயிலர் படத்துக்கு கூட தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்பட்டது. இந்த நிலையில், விஜய்யின் லியோ படத்துக்கு அதிகாலை காட்சி திரையிட தமிழக அரசிடம் அனுமதி கோரப்பட்டது.

ஒருவேளை அனுமதி கிடைக்கவில்லை என்றால் அக்டோபர் 18-ந் தேதி மாலை ப்ரீமியர் ஷோ திரையிடவும் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் தற்போது லியோ படத்தின் அதிகாலை காட்சியை திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இதனால் வருகிற 19-ந் தேதி அதிகாலை 4 மணி காட்சி திரையிடப்பட உள்ளது உறுதியாகி உள்ளது. இதையடுத்து 20-ந் தேதி முதல் 24-ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருவதால் அந்த 5 நாட்களும் தினசரி 5 காட்சிகள் அதாவது காலை 7 மணி முதல் சிறப்பு காட்சிகள் திரையிட்டுக் கொள்ள திரையரங்குகளுக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Exit mobile version