Tamil News

“இந்தியன் 2” பிரம்மாண்ட இயக்குனர் இரகசியமாக வைத்திருந்த அந்த ஒரு ரகசியம் கசிந்தது

பிரம்மாண்ட இயக்குனர் என பெயரெடுத்தவர் ஷங்கர். இதற்கு காரணம் அவர் இயக்கிய படங்கள் தான். வழக்கமாக இயக்குனர்கள் சண்டைக்காட்சிகளை தான் பிரம்மாண்டமாக எடுப்பார்கள், ஆனால் இயக்குனர் ஷங்கர் அதற்கு ஒருபடி மேலே போய் பாடல்காட்சிகளில் வித்தியாசமாக யோசித்து பிரம்மாண்டத்தை புகுத்தி ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்திருப்பார். அதனால் தான் இவரை பிரம்மாண்ட இயக்குனர் என அழைக்கின்றனர்.

தற்போது ஷங்கர் இதுவரை இல்லாத வகையில் புது முயற்சியாக ஒரே நேரத்தில் இரண்டு பிரம்மாண்ட படங்களை இயக்கி வருகிறார். அதில் ஒன்று கேம் சேஞ்சர், ராம்சரண், கியாரா அத்வானி நடிப்பில் உருவாகும் இப்படத்தை தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாக்கி வருகிறார் ஷங்கர்.

தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அடுத்தாண்டு பொங்கலுக்கு இப்படம் திரைக்கு வர உள்ளது.

அதேபோல் ஷங்கர் இயக்கிவரும் மற்றுமொரு பிரம்மாண்ட திரைப்படம் இந்தியன் 2. லைகா நிறுவனமும் ரெட் ஜெயண்ட்டும் இணைந்து தயாரிக்கும் இந்த பிரம்மாண்ட திரைப்படத்தில் கமல்ஹாசன் நாயகனாக நடித்து வருகிறார்.

அவருடன் காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் இப்படத்தின் ஷூட்டிங்கும் இன்னும் ஓரிரு மாதங்களில் முடிவடைந்துவிடும்.

கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேலாக இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வரும் ஷங்கர், அப்படத்தில் மெயின் வில்லனாக நடிக்கும் நடிகர் யார் என்கிற தகவலை வெளியிடாமல் சீக்ரெட்டாக வைத்திருந்தார். அந்த சீக்ரெட் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

அதன்படி நடிகர் எஸ்.ஜே.சூர்யா தான் இந்தியன் 2 படத்தில் மெயின் வில்லனாக நடித்துள்ளாராம். இப்படத்திற்காக அவருக்கு மிகப்பெரிய தொகையை சம்பளமாக கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் ஷங்கர் இயக்கும் கேம் சேஞ்சர் படத்திலும் எஸ்.ஜே.சூர்யா தான் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version