Site icon Tamil News

அமெரிக்காவில் தமிழக மாணவி கைது – பிரின்ஸ்டன் பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழையவும் தடை

அமெரிக்காவின் பிரபலமான பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் இந்திய வம்சாவளி மாணவி ஒருவர், இஸ்ரேல் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் பிறந்த அசிந்தியா சிவலிங்கன் என்ற மாணவியும், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயிலும் மற்றொரு மாணவரான ஹசன் சையத் ஆகிய இருவரும் வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் நடத்தும் வாராந்திர பத்திரிகை உறுதிப்படுத்தியுள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் ஜெனிபர் மொரில் கூறும்போது, “பல்கலைக்கழகத்துக்குள் கூடாரங்கள் அமைப்பது என்பது விதிகளுக்கு எதிரானது. அவர்கள் கூடாரம் அமைத்து இஸ்ரேல் எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

அதில் நிறைய மாணவர்கள் கலந்து கொண்டனர். அசிந்தியா, ஹசன் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். முன்னதாக, பலமுறை மின்னஞ்சல் மூலம் பல்கலைக்கழகம் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. அதன் பின்னரே இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த இரு மாணவர்களும் இனி பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைய தடை விதிக்கப்படுகிறது. இருப்பினும், அவர்கள் பல்கலைக்கழகத்தில் உள்ள அவர்களுக்கான தங்கும் இடத்தை மட்டும் பயன்படுத்திக் கொள்ள முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

அசிந்தியா சிவலிங்கம் பொது விவகாரங்கள் துறையில் முதுநிலை பட்டம் பயின்று வருகிறார். சையத் அதே துறையில் ஆராய்ச்சி மாணவராக இருக்கிறார்.

இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் கூடாரம் அமைத்து இஸ்ரேல் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை அனைவரும் அதனைக் கைவிட்டுச் சென்றுள்ளதாகவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version