Site icon Tamil News

புதிய ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி வாழ்த்து

இலங்கைத்தீவின் 9வது ஜனாதிபதியாகப் பதவியேற்கவுள்ள அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தநாட்டின் அரச இயந்திரத்தின் கொள்கை வகுப்பிலும், செயற்றிறனிலும் மாற்றத்தை எதிர்பார்த்து தங்களுக்கு ஆணை வழங்கிய தென்னிலங்கை மக்களைப் போலவே, கடந்த எழுபது ஆண்டுகால ஒடுக்குமுறைத் தளைகளிலிருந்து விடுபட்டு இறைமையுள்ள இனமாக வாழ்வதற்கான ஏதுநிலைகள் தங்களின் ஆட்சிக்காலத்திலேனும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஈழத்தமிழர்களிடையே நிறைந்திருக்கிறது.

விசேடமாக, இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு இனத்தின் வலியுணர்ந்த சக பிரஜையாகவும், எமது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக்கூடிய அரசதலைவராகவும் செயலாற்றும் வகையில் தங்கள் தலைமையிலான ஆட்சிபீடம் கட்டமைக்கப்படுமாயின், அதுவே இந்த நாட்டின் சுபீட்சத்துக்கான அடித்தளமாக அமையும்.

நாட்டின் அரசியல், பொருளாதார தளம்பல் நிலைகளை சமன் செய்வதிலுள்ள சவால்களை எதிர்கொண்டு செயலாற்றத் தயாராவதைப் போன்று, ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை உணர்ந்த மக்கள் தலைவராக, இனவாதமற்ற இலங்கைத் தீவை உருவாக்கும் அரசியல் கூருணர்வு மிக்க செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம், ஈழத்தமிழர்களின் அடிப்படை உரித்துகளை உறுதிசெய்யும் வகையில் தங்களின் ஆட்சி மலரும் என்ற எதிர்பார்ப்போடு, தங்களின் வெற்றிக்கான வாழ்த்துகளை பகிர்ந்து கொள்கிறேன்.

சிவஞானம் சிறீதரன்.

நாடாளுமன்ற உறுப்பினர்.

 

Exit mobile version