Tamil News

எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இலங்கை உயர் தொழில்நுட்ப கல்லூரி திருகோணமலை வளாக மாணவர்கள்: விடுத்துள்ள கோரிக்கை

இலங்கை உயர் தொழில்நுட்ப கல்லூரி திருகோணமலை வளாகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இன்று (03) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுப்பட்டுள்ளனர்.

கன்னியா உயர் தொழில்நுட்ப கல்லூரியில் இருந்து நடைப்பவனியாக அனுராதபுர சந்தி வரைக்கும் வருகை தந்து பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் மாணவர்களினால் ஊடக அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டது.

ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

”உயர் கல்வி அமைச்சின் கீழ் இயங்குகின்ற இலங்கை உயர் தொழில்நுட்ப நிறுவனமானது ( Sri Lanka Institute of Advanced Technological Education – SLIATE ), நாடளாவிய ரீதியில் 12 Advanced Technology Institute – ATI நிறுவனங்களை கொண்டது. அதில் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ATI கல்வி நிறுவனமானது Higher National Diploma in Accountancy (HNDA), Higher National Diploma in English (HNDE) ,
Higher National Diploma in Information Technology (HNDIT) , Higher National Diploma in Tourism and Hospitality Management (HNDTHM) ஆகிய நான்கு கற்கைநெறிகளையும் வழங்கி வருகிறது.

இவற்றுள் ஏனைய கற்கைநெறிகளைக் காட்டிலும் குறிப்பாக HNDIT கற்கைநெறிக்காக ஏராளமான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறுவதுடன் வருடாந்தம் நூறுக்கு அண்மித்த மாணவர்கள் உள்ளீர்க்கப்படுகிறார்கள். பாடசாலையை பூர்த்தி செய்த பின்பு உயர் கல்வியை தொடர எதிர்பார்த்திருப்போருக்கான பல்கலைக்கழகங்களுக்கு நிகரான சிறந்த தெரிவாக இந்த SLIATE – ATI நிறுவனம் காணப்படுகின்றது.

இன்றைய 21ம் நூற்றாண்டிலே உலகெங்கும் பெருமளவில் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தியுள்ள தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப துறையில் (ICT Sector) திருகோணமலை மாணவர்கள் தங்களுடைய எதிர்காலத்தை வடிவமைத்துக் கொள்வதற்கும் அங்கீகாரம் வாய்ந்த கல்வித் தகுதியொன்றை (Higher National Diploma ) இலவசமாக அரச நிறுவகமொன்றில் பெற்றுக்கொள்வதற்கும் நல்லதொரு வாய்ப்பாக விளங்குகின்ற இந்த ATI – Trincomalee நிறுவனத்தில் HNDIT கற்கைநெறியானது நிரந்தர விரிவுரையாளர்கள் பற்றாக்குறை காரணமாக இடைநிறுத்தப்படவுள்ளமையானது திருகோணமலை சமூகத்தின் கல்விப்புலத்திலே பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பது உறுதி.

ATI – Trincomalee நிறுவகத்திலே HNDIT கற்கைநெறியை பூர்த்தி செய்த மாணவர்கள் பலர் தற்போது IT துறையில் பல்வேறு நிறுவனங்களில் நல்ல தொழில் வாய்ப்புக்களை பெற்று பிரகாசித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறிருக்க திருகோணமலைவாழ் இளம் சமூகத்தினை துறைசார்ந்து வளப்படுத்தும் பயனுறுதிமிகு இக்கற்கைநெறியானது இடைநிறுத்தப்படுவது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டியதும் உயர் மட்டங்களுக்கு இவ்விடயத்தை எடுத்துச் சென்று உரிய தீர்வொன்றினை பெற்றுக் கொடுத்து HNDIT கற்கைநெறியானது தொடர்ந்து திறம்பட வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டியதும் திருகோணமலை மீது உண்மையிலே கரிசனை கொண்ட குடிமகன் ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும்” என குறித்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version