Site icon Tamil News

சிறப்புப் பொருளியல் மண்டலம்: விரைவில் சிங்கப்பூர்-மலேசியா இடையே உடன்பாடு

மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் சிறப்புப் பொருளியல் மண்டலத்தை ஏற்படுத்துவதற்கான திட்டங்கள் வரும் செப்டம்பர் மாதம் சிங்கப்பூருடன் கலந்துபேசி இறுதி செய்யப்படும் என்று மலேசியா கூறியுள்ளது.

முழு அளவிலான உடன்பாடு ஒன்றில் கையெழுத்திடுவது தொடர்பாகவும் சிங்கப்பூருடன் கலந்து ஆலோசிக்கப்படும் என்றும் மலேசியப் பொருளாதார அமைச்சர் முகமது ரஃபிஸி ரம்லி புதன்கிழமை (ஜூலை 10) தெரிவித்தார்.

சிங்கப்பூருக்கு சற்று வடக்கே அமைந்துள்ள மலேசியாவின் தென்மாநிலமான ஜோகூரில் சிறப்புப் பொருளியல் மண்டலத்தை ஏற்படுத்த இவ்வாண்டு ஜனவரி மாதம் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.அதற்கான புரிந்துணர்வுக் குறிப்பில் சிங்கப்பூரின் வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங்கும் மலேசியப் பொருளாதார அமைச்சர் முகமது ரஃபிஸி ரம்லியும் இவ்வாண்டு ஜனவரி மாதம் கையெழுத்திட்டனர்.

அப்போதைய சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் அந்நிகழ்வைப் பார்வையிட்டனர்.இருதரப்பிலும் முதலீடுகளை ஈர்க்கவும் சரக்குப் போக்குவரத்து மற்றும் மக்களின் நடமாட்டத்தை அதிகரிக்கவும் அந்த மண்டலத்தை அமைப்பதற்கான யோசனை தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இதற்கான இறுதி உடன்பாடு சிங்கப்பூர், மலேசியத் தலைவர்களுக்கு இடையிலான வருடாந்திர ஓய்விடச் சந்திப்புக்கு முன்னரே கையெழுத்து இடப்படும் என்று ரஃபிஸி தெரிவித்துள்ளார். அச்சந்திப்பு ஆண்டின் பிற்பாதியில் நிகழ உள்ளது.

“காலக்கெடுவுக்குள் உடன்பாட்டை இறுதிசெய்வதற்கான பணிகளை முடித்துவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.சிறப்புப் பொருளியல் மண்டலம் தொடர்பான முதலீட்டுக் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்க வந்தபோது அவர் அதனைத் தெரிவித்தார்.

ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்திற்கான உத்தேசத் திட்டத்தில் கடப்பிதழ் இல்லாத குடிநுழைவு அனுமதி முறையும் அடங்கும். வர்த்தக அனுமதியை எளிமைப்படுத்துவது, புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான ஒத்துழைப்பு போன்றவை அத்திட்டத்தின் பிற பகுதிகள்.

வர்த்தக மையமான இஸ்கந்தார் மலேசியாவிலும் மலேசியாவின் எண்ணெய், எரிவாயு மேம்பாட்டு அம்சங்கள் நிறைந்திருக்கும் பெங்கராங் மாவட்டத்திலும் சிறப்புப் பொருளியல் மண்டலத்தை நிறுவுவதற்கான திட்டங்களை ஜோகூர் மாநில அதிகாரிகள் அளித்துள்ளதாக ஊடகத் தகவல்கள் கூறின.

சீனா முதல் தென்கிழக்காசியா வரை உள்ள நிறுவனங்கள் உட்பட மேற்கத்திய, கிழக்கத்திய முதலீட்டாளர்களின் நுழைவாயிலாக சிறப்புப் பொருளியல் மண்டலம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக திரு ரஃபிஸி தெரிவித்துள்ளார்.

Exit mobile version