Tamil News

அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்!! 5 வயது மகளை அடித்துக் கொன்று, துண்டுகளாக நறுக்கி காணாப்பிணமாக்கிய தந்தை..

5 வயது மகளை அடித்தே கொன்றதுடன், சடலத்தை மறைக்க அதனை துண்டுகளாக நறுக்கி, தான் பணிபுரியும் உணவகத்தில் மறைத்து வைத்தது உட்பட பல்வேறு கொடூரங்களை அரங்கேற்றிய ஒரு கொடூர தந்தையின் பின்னணியை அமெரிக்க பொலிஸார் பொதுவெளிக்கு தெரிவித்துள்ளனர்.

நியூ ஹாம்ப்ஷயரைச் சேர்ந்தவர் ஆடம் மான்ட்கோமெரி. உணவகம் ஒன்றில் சமையல் உதவியாளராக பணியாற்றி வந்தார். போதைப்பொருள் உபயோகம் காரணமாக, ஊதாரியாகவும், குடும்பத்தில் அக்கறை இல்லாதவராகவும் தொடர்ந்துள்ளார். அமெரிக்காவில் வீடற்றவர்கள் அளவில் பெரிய காரில் வசிப்பது வழக்கம். அப்படி கார் வீட்டில் வசித்து வந்தபோது, தனது 5 வயது மகளை அடித்தே கொன்றிருக்கிறார். காரை அசுத்தம் செய்ததற்காக, போதையில் உச்சத்தில் பலமுறை குத்துக்கள் விட்டதில், அந்த சிறுமி அழுது அரற்றி இறந்திருக்கிறார்.

மகள் இறந்ததை அடுத்து, சடலத்தை மறைக்க பல நாட்கள் தடுமாறி இருக்கிறார் ஆடம். பை ஒன்றில் வைத்து பல இடங்களில் பதுக்கி சமாளித்தவர், சடலம் அழுகத் தொடங்கியதும் சுதாரித்தார். சடலத்தை வெளியுலகம் அறியாது, காணாப்பிணமாக்க முடிவு செய்தார். சிறுமி சடலத்தை சிறு துண்டுகளாக நறுக்கியவர், அவற்றை தினமும் கொஞ்சமாக தான் பணியாற்றும் உணவகத்துக்கு எடுத்துச் சென்றார். அங்கே உணவுகள் கெடாதிருக்க சேமிக்கப்படும் பெரும் கொள்கலனில் பையை வைத்திருப்பார். பின்னர் முந்தை தினத்தின் குப்பைகள் என்ற பெயரில் உணவகத்தின் குப்பைகளோடு, மகள் சடலத்தின் எச்சங்களை கலந்து விடுவார்.

ஹார்மனி - ஆடம்;
பலியான சிறுமியும் கொலைகார தந்தையும்

இப்படியே தினமும் கொஞ்சமாக மகள் சடலத்தை காணடித்து வந்தார். மொத்தமாக சடலம் தட்டுப்பட்டால், தான் மாட்டிக்கொள்வோம் என்று வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உணவகத்துக்கு எடுத்துச்சென்று மொத்த குப்பையில் கலந்து வந்தார். தினசரி வித்தியாசமான பையை ஆடம் எடுத்து வருவதை, உணகத்தின் ஊழியர்கள் மற்றும் வழக்கமான வாடிக்கையாளர்கள் பார்த்துள்ளனர். அந்தப் பையில் ஒளிந்திருந்த விபரீதம் ஆடம் கைதான பிறகே அவர்களுக்கும் தெரிய வந்தது.

ஆடமின் மகள் காணாது போய் 2 வருடங்கள் வரை பொலிஸார் இந்த கொடூர பின்னணியை அறிந்திருக்கவில்லை. கணவரிடமிருந்து பிரிந்து வாழும் ஆடமின் மனைவி கைலா தெரிவித்த தகவல்களை அடுத்தே பொலிஸார் ஆடமை வளைத்தனர். கூடவே தன்னைக் காத்துக்கொள்ள நீதிமன்றத்தில் பொய் சொன்ன கைலாவையும் கைது செய்தனர். கைலா 18 மாத சிறை தண்டனைக்கு ஆளாக, கொடூர கொலை, ஆயுதங்களை பயன்படுத்தியது, சாட்சியங்களை கலைத்தது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் ஆடம் 30 ஆண்டு சிறைக்கு ஆளாகி உள்ளார்.

Exit mobile version