Site icon Tamil News

இலங்கை அத்துருகிரிய துப்பாக்கிச் சுட்டு சம்பவம்: விசாரணையில் வெளியான பல திடுக்கிடும் தகவல்

கொழும்பின் புறநகர் பகுதியான அத்துருகிரியவில் நேற்றையதினம் இடம்பெற்ற துப்பாக்கி சுட்டு சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட வர்த்தகரான வசந்த பெரேரா 2019ஆம் ஆண்டு துபாயில் பாதாள உலகக் கும்பல் தலைவர்களாக இருந்த மாகந்துரே மதுஷ், கஞ்சிபானி இம்ரான் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்ததில் கிளப் வசந்த எனப்படும் வசந்த பெரேராவுக்கு தொடர்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மாகந்துரே மதுஷிற்கு சொந்தமான 100 கோடி ரூபாய் பணமும் கிளப் வசந்தவிடம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

கஞ்சிபானி இம்ரான் பல தடவைகள் கிளப் வசந்தவிடம் அந்தப் பணத்தைத் தருமாறு கோரியுள்ளார். ஆனால், அந்தப் பணத்தை கிளப் வசந்த கொடுக்க மறுத்துள்ளார்.

இதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நுவரெலியாவில் கிளப் வசந்தவை கொலை செய்யத் திட்டமிடப்பட்டு அது தோல்வியடைந்துள்ளது.

இவ்வாறான பின்னணியில் கிளப் வசந்தவை இலக்கு வைத்து அத்துருகிரியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் 3 மாதங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொலையில் Tattoo நிலைய உரிமையாளருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதற்கமைய, அதன் உரிமையாளர் உட்பட 7 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பலபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் அவர், பச்சை குத்தும் கலை அறிந்தவர் எனவும், ஆனால் அதற்கான ஸ்தாபனமொன்றை நடத்துவதற்கு பணம் அவரிடம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பலபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் தனது நண்பர் ஊடாக வெளிநாட்டவர் ஒருவருடன் தொடர்புகளைப் பேணி வந்துள்ளார்.

Tattoo நிலையத்தின் திறப்பு விழாவொன்றை ஏற்பாடு செய்து, கிளப் வசந்த உட்பட பிரபலங்கள் சிலரை அழைக்குமாறு, வெளிநாட்டில் உள்ள நபர் Tattoo நிலைய உரிமையாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

துபாயில் இருந்து அவரது வங்கிக் கணக்கில் 10 இலட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதற்கமைய கிளப் வசந்தவை திறப்பு விழாவிற்கு வருமாறு சமூக வலைத்தளங்கள் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

அழைப்பை ஏற்று கிளப் வசந்த, பாடகி கே.சுஜீவா உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர். இந்நிலையில் குறித்த நிலையத்திற்கு மகிழுந்தில் வந்த இருவர், 17 நொடிகளில் சம்பந்தப்பட்ட குழுவினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இதேவேளை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் Tattoo நிலைய உரிமையாளர் உட்பட 7 சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு 10 காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

Exit mobile version