Tamil News

சென்னையில் பரபரப்பு சம்பவம்… உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சைக்குச் சென்ற இளைஞர் பலி…!

சென்னையில், உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட புதுச்சேரி இளைஞர், சிகிச்சை தொடங்கிய 15 நிமிடத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை டி.வி.நகரை சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள். 26 வயதான இருவரும் இரட்டையர்கள். இதில் ஹேமச்சந்திரன் பி.எஸ்சி., முடித்துவிட்டு டிசைனிங் பணியில் இருந்தார். ஹேமராஜன் சித்தா பார்மசிஸ்ட்டாக உள்ளார்.

ஹேமச்சந்திரனுக்கு உடல் எடை பிரச்சினை இருந்து வந்துள்ளது. இவரது சுமார் 150 கிலோவுக்கும் மேல் இருந்ததால் சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டது.

பம்மலில் உள்ள ரெலா மருத்துவமனை

இதற்காக கடந்த 22ம் திகதி அவர் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவரது உடல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே ஹேமச்சந்திரனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது குடும்பத்தினர் இன்று புதுச்சேரி சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version