Site icon Tamil News

`இந்தி நாட்டின் தேசிய மொழி…!” – சர்ச்சையை ஏற்படுத்திய உச்ச நீதிமன்ற நீதிபதி

வாகன விபத்து வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்ற நீதிபதியொருவர், இந்தியை தேசிய மொழி எனக் கூறியிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

முன்னதாக மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் வாகன விபத்து ஒன்று ஏற்பட்டிருக்கிறது. இதில் மோட்டார் வாகன சட்டத்தின்படி, உரிமை கோருபவர்கள் தாங்கள் வசிக்கும் அல்லது வணிகம் நடத்தும் இடத்துக்கு அருகிலுள்ள மோட்டார் விபத்து உரிமைகோரல் தீர்ப்பாயத்தில் (MACT) வழக்கு தொடுக்கலாம். இதனடிப்படையில், இந்த வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதால், உத்தரப்பிரதேசத்தின் ஃபதேகரில் உள்ள மோட்டார் விபத்து உரிமைகோரல் தீர்ப்பாயத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுத்திருக்கிறார்.

ஆனால், குற்றம் சாட்டப்பட்ட நபர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் என்பதால், “எனக்கு இந்தி தெரியாது. உத்தரப்பிரதேசத்திலுள்ள தீர்ப்பாயத்தில் எவ்வாறு இந்தியில் வாதிடுவது. எனவே இந்த வழக்கை விபத்து நடந்த டார்ஜிலிங் மாவட்டத்திலுள்ள தீர்ப்பாயத்துக்கு மற்ற வேண்டும்” என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி தீபங்கர் தத்தா, “இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில், மக்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசுகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. இங்கு குறைந்தபட்சமாக 22 மொழிகள் அதிகாரபூர்வ மொழிகளாக இருக்கின்றன.

இருப்பினும் இந்தி தேசிய மொழியாக இருப்பதால், மனுதாரர் உத்திரப்பிரதேசத்திலுருக்கும் தீர்ப்பாயத்தில் தன்னுடைய சாட்சியங்களின் வாதங்களை இந்தியில் முன்வைக்கலாம்.

மேலும் மனுதாரரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால், பாதிக்கப்பட்டவர் தனக்கு வங்காள மொழி தெரியாது, எனவே மேற்கு வங்கத்துக்கு இந்த வழக்கை மாற்றக்கூடாது எனக் கூறுவார்.

மோட்டார் வாகன சட்டமும், உரிமை கோருபவருக்கு அருகிலிருக்கும் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர அனுமதிக்கிறது. எனவே மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது” என்று உத்தரவிட்டார். இந்த நிலையில், இந்தியை தேசிய மொழி என உச்ச நீதிமன்ற நீதிபதி கூறியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

 

Exit mobile version