Tamil News

இலங்கை கிரிக்கெட்டின் சரா பெனல் நடுவராக மூதூர் சிஹான் சுஹூட் தரமுயர்வு!

இலங்கை கிரிக்கெட் நடுவர் குழாம் தரம் 4 இல் இருந்து தரம் 3 க்கான தரமுயர்வு போட்டி தேர்வு கடந்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரை கொழும்பு நாலந்தா கல்லூரி மற்றும் கெத்தாராம ஆர் பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஆகிய இடங்களில் இடம்பெற்றிருந்து.

இத்தெரிவிற்காக இலங்கை கிரிக்கெட் தரம் 4 இல் அங்கம் வகிக்கும் 162 நடுவர்கள் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது.

இதில் இலங்கை கிரிக்கெட் சபையானது தேசிய ரீதியாக 25 நடுவர்களை மாத்திரம் அங்கீகரித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அதற்கு அமைவாக திருகோணமலை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினூடாக மேற்படி தரமுயர்வில் பங்குபற்றிய சிஹான் சுஹூட் அவர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ரீதியில் முதல் இடத்தினையும், தேசிய ரீதியில் நான்காவது இடத்தினையும் தக்கவைத்ததன் மூலம் திருகோணமலை மாவட்ட கிரிக்கெட்டிற்கு பெருமை சேர்த்தது மட்டுமல்லாது திருகோணமலை மாவட்ட கிரிக்கெட் வரலாற்றில் முதலாவது சரா பெனல் நடுவர் என்ற வரலாற்று ரீதியான சாதனையை படைத்துள்ளார் மூதூர் மகன் சிஹான் சுஹூட்.

தற்போது இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிகட் சபையின் தரம் 2 நடுவராக கடமையாற்றும் சிஹான் சுஹூட் இங்கிலாந்தின் சஸ்ஸெக்ஸ் பிராந்திய லீக்கின் முதல்தர நடுவருமாவார்.

மூதூர் மத்திய கல்லூரி, திருகோணமலை இ.கி.ச இந்துக்கல்லூரி மற்றும் மாவனல்ல சாஹிறா கல்லூரிகளின் பழைய மாணவரான சிஹான் சுஹூட் மூதூர் வெஸ்டன் வோறியஸ் அணியின் தலைவரும், திருகோணமலை நடுவர்கள் சங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினரும், மூதூர் யூ.டி.பி.எம் அமைப்பின் நடுவர் பயிற்றுவிப்பாளரும் ஆவார்.

Exit mobile version