Site icon Tamil News

கடத்திச் செல்லப்பட்டு நிலத்தடி அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமி மீட்பு

பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்டு நிலத்தடி அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 14 வயது சிறுமியை புத்தல பொலிஸார் மீட்டுள்ளனர்.

சிறுமியை அவரது காதலன் என்று கூறப்படும் 20 வயது இளைஞன் கடத்திச் சென்றுள்ளார்.

புத்தள,  கட்டுகஹகல்கே பகுதியிலுள்ள வீடொன்றுக்கு கடந்த 9ஆம் திகதி இரவு வந்த மூன்று இளைஞர்கள் அங்கு உறங்கிக் கொண்டிருந்த 14 வயது சிறுமியை கடத்திச் சென்றுள்ளனர்.

கடத்தலை தடுக்க முற்பட்ட போது இளைஞர் ஒருவர் சிறுமியின் தந்தையின் கையை கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பின்னர் சிறுமியின் தந்தை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டு வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஆனால் கடத்தப்பட்ட சிறுமியை பொலிசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

எவ்வாறாயினும், நீண்ட விசாரணையின் போது, ​​பிரதான சந்தேக நபருடன் சிறுமியை கடத்த வந்த மற்ற இரு இளைஞர்களையும் பொலிஸார் அடையாளம் காண முடிந்தது.

இதன்படி, இரு இளைஞர்களையும் பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தியதில், கடத்தப்பட்ட சிறுமியை புத்தல புறநகர் பகுதியில் உள்ள பிரதான சந்தேகநபரின் மாமாவின் வீட்டின் நிலக்கீழ் அறையொன்றில் அடைத்து வைத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அதன்படி, புத்தல பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜயதிலக பண்டார உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று உடனடியாக குறித்த வீட்டிற்குச் சென்றதுடன், குறித்த சிறுமி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.

சிறுமியை மறைப்பதற்காக இந்த நிலக்கீழ் அறை ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் தயார் செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஐந்தடி உயரமும், ஆறடி அகலமும் கொண்ட அந்த அறையில் காற்றோட்டத்திற்காக இரண்டு சிறிய துளைகள் மட்டுமே இருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்த வீட்டின் உரிமையாளரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அறையில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி மருத்துவ சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கடத்தப்பட்ட 14 வயது சிறுமியின் மூத்த சகோதரியுடன் இதற்கு முன்னர் காதல் தொடர்பு வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல சந்தர்ப்பங்களில் அவருடன் வர மறுத்ததால், அவர் உறவை நிறுத்திவிட்டு, கடத்தப்பட்ட 14 வயது சிறுமியுடன் உறவைத் தொடங்கினார்.

சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர், சந்தேக நபர் சிறுமியை பலவந்தமாக அழைத்துச் சென்றதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இம்முறை கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் மாமாவும் உதவியதுடன் குறித்த நபர் சிறுமியை வீட்டின் நிலகீழ் அறையில் மறைத்து வைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை இன்று வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, ​​அவர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Exit mobile version