Tamil News

சீயோன் தாக்குதல் : பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வுத்துறை அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வுத்துறை அதிகாரி தொடர்புகள் குறித்து வெளியாகும் தகவல்களை அடிப்படையாக கொண்டு அவர்களை கைதுசெய்து விசாரணைசெய்து குற்றவாளிகளுக்கு தண்டனைபெற்றக்கொடுக்கவேண்டும் என குறித்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உறவுகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட தமது உறவுகளுக்கு நீதிகிடைக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஐந்து வருட நினைவு தினத்தையொட்டி குண்டுவெடிப்பு இடம்பெற்ற சீயோன் தேவாலயத்தில் இன்று (21.04)காலை உயிரிழந்தவர்களின் உறவுகள் மெழுகுவர்த்தி ஏற்றி மலரஞ்சலி செலுத்தினார்கள்.

குண்டுவெடித்த சீயோன் தேவாலயத்திற்கு வந்த உறவுகள் கண்ணீர்மல்க இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டனர்.

குண்டுத்தாக்குதல் நடைபெறுவதற்கு முன்பாக தாங்கள் குடும்பமாக சந்தோசமாக மகிழ்ச்சியாகயிருந்ததாகவும் இன்று அவை இல்லாமல்போயிவிட்டதாகவும் இதன்போது கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்த அஞ்சலியில் குண்டுத்தாக்குதலின்போது தனது இரண்டு கண்களையும் இழந்த சிறுமியும் கலந்துகொண்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியது.

கடந்த 2019 ஏப்ரல் 21 ம் திகதி சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 14 சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன் 83 பேருக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

Exit mobile version