Site icon Tamil News

குவியும் அகதிகள் – மெக்சிகோ எல்லைக்கு 1,500 படை வீரர்களை அனுப்பும் அமெரிக்கா

அமெரிக்கா மெக்சிகோ இடையேயான எல்லை பகுதிகளில் 1,500 படை வீரர்களை அனுப்ப முடிவு செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தென்மேற்கு எல்லைப் பகுதிகளில் மெக்சிகோ வழியாக அமெரிக்காவிற்குள் நுழையும் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில், மெக்சிகோவைத் தவிர பிற நாடுகளைச் சேர்ந்த அகதிகளை அமெரிக்கா அவர்களது நாட்டிற்கே திருப்பி அனுப்பி வருகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக பென்டகன் செய்தி தொடர்பாளர் பேட் ரைடர் பேசும் பொழுது, இந்த மாத இறுதியில் அமெரிக்கா தொற்று நோய் கால கட்டுப்பாடுகளை நீக்க இருப்பதாலும், ஊடுருவும் அகதிகளை தடுப்பதற்காகவும் 1500 ராணுவ வீரர்களை 90 நாட்களுக்கு அனுப்பப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பாதுகாப்பு வீரர்கள் 90 நாட்களுக்கு தரை சார்ந்த கண்டறிதல், கண்காணிப்பு, பதிவேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை மேற்கொள்ளவிருப்பதாகவும், கைது உள்ளிட்ட சட்ட அமலாக்க நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே ஜோ பைடனின் இந்த நடவடிக்கை அதிபர் தேர்தலை மையமாக வைத்து எடுக்கப்படுவதாக ஊடகங்கள் விமர்சித்து வருகின்றன.

Exit mobile version