Site icon Tamil News

காயத்தால் ராகுல் விளையாடுவதில் சிக்கல்!

இங்கிலாந்து – இந்தியா மோதும் 5வது டெஸ்டில் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காயம் காரணமாக கே.எல்.ராகுல் ஆடுவது கேள்விக்குறியாகியுள்ளது.

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அதிர்ச்சியை கொடுத்தது. அடுத்து 2வது டெஸ்டில் 106 ரன்கள், 3வது டெஸ்டில் 434 ரன்கள், 4வது டெஸ்டில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அதிரடியாக அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்தது. தற்போது இந்திய அணி 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் வென்றது.

இந்நிலையில், 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் மார்ச் 7-ம் தேதி தர்மசாலாவில் நடக்க உள்ளது. இந்தத் தொடரை இந்தியா வென்றுவிட்டதால், தொடர்ந்து ஆடும் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கவும், புதிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கவும் இந்திய அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

மேலும், தசைப்பிடிப்பு காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகிய நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல், கடைசி டெஸ்டில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பயிற்சியில் ஈடுபட்டபோது மீண்டும் தசைப்பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. அதனால், சிகிச்சை எடுப்பதற்காக அவர் லண்டன் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. அதனால், கே.எல்.ராகுல் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது. இதுபோன்று இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version