Site icon Tamil News

உக்ரைன், காஸாவில் புதிய அமைதி முயற்சிகளை ஏற்படுத்த போப் பிரான்சிஸ் வேண்டுகோள்

உக்ரைன் ரஷ்யா இடையிலான போரில் இரு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதேபோல், காசாவுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் போரும் நீடித்து வருகிறது.

இதற்கிடையே, உக்ரைன் தலைநகர் கீவில் ஆக்மத்தித் என்ற குழந்தைகள் மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா திடீரென அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது. இதற்கு சர்வதேச அளவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.ஆனாலும், உக்ரைனில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள்மீது தாக்குதல் எதுவும் நடத்தவில்லை எனக்கூறிய ரஷ்யா, இதற்கு பொறுப்பேற்க முடியாது என மறுப்பு தெரிவித்தது.

இந்நிலையில், உக்ரைன் மற்றும் காசாவில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு போப் பிரான்சிஸ் வேதனை தெரிவித்துள்ளார். அங்கு, புதிய அமைதி முயற்சிகளை ஏற்படுத்த வேண்டும் என போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக வாடிகன் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது,

படுகொலை செய்யப்பட்ட ஒன்றுமறியாத மக்கள் மற்றும் காயமடைந்த நபர்களுக்கு தன்னுடைய வருத்தங்களை தெரிவித்துக் கொள்வதுடன், நடந்து வரும் மோதல்களுக்கு முடிவு ஏற்படுத்துவதற்கான வலுவான பாதைகள் அடையாளம் காணப்பட வேண்டும் என பிரார்த்தனை செய்து கொள்கிறார். அதற்கான நம்பிக்கையையும் தெரிவித்துக் கொள்கின்றார்.

உக்ரைனில் மரணம் அடைந்தவர்களுக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்ள வேண்டும்.இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணய கைதிகள் மற்றும் பாலஸ்தீனியர்கள் விவகாரத்தில் சமரச தீர்வு ஏற்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Exit mobile version