Site icon Tamil News

2வது திருமணம் செய்ய எதிர்ப்பு: காதல் கணவர் வீட்டு முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளம்பெண்!

ராமநாதபுரத்தில் காதல் கணவரை சேர்த்து வைக்க கோரி அவரது வீட்டு முன் மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கருமொழி கிராமத்தைச் சேர்ந்தவர் சரண்யா (27). இவரும் ஆதியாக்குடி கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரும் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றினர்.அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதையடுத்து கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வடபழனியில் உள்ள அழகிரி நகர் மாரியம்மன் கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் மகேந்திரனுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய பெற்றோர் பெண் பார்த்து முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த சரண்யா, சென்னையில் இருந்து ஆதியாகுடிக்கு சென்று மகேந்திரனிடம் வேறு திருமணம் செய்யக்கூடாது எனக் கூறி மன்றாடி உள்ளார்.அப்போது மகேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் சரண்யாவை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றி கதவைப் பூட்டி விட்டுச் சென்றுள்ளனர்.

இதனால் கணவர் வீட்டு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் சரண்யா ஈடுபட்டார். இது தொடர்பாக அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சரண்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதுகுறித்து சரண்யா கூறும் போது, தனக்கும் மகேந்திரனுக்கும் 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றதாகவும், பலமுறை தான் கர்ப்பம் அடைந்தபோது, மகேந்திரன் கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து கர்ப்பத்தை கலைத்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

தனது கணவருக்கு வேறு இடத்தில் பெண் பார்க்கும் தகவல் அறிந்து திருவாடானை மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தபோதும் நடவடிக்கை எடுக்காததால், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார், இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Exit mobile version