Site icon Tamil News

நியூ மெக்சிகோ காட்டுத் தீயால் 500 வீடுகள் சேதம்; இருவர் உயிரிழப்பு

நியூ மெக்சிகோவில் தெற்குப் பகுதியில் மூண்டுள்ள காட்டுத் தீயால் கிட்டத்தட்ட 500 வீடுகள் தீயில் எரிந்து சேதமாயின. இந்தத் தீயில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். மேலும், ருயிடோசோ நகரத்தில் வசிக்கும் 8,000 குடியிருப்பாளர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் இருந்து அதிகாரிகள் வெளியேற்றினர்.

உயிரிழந்தவர்களில் ஒருவரின் சடலம் எரிந்த நிலையில் இருந்த காரின் ஓட்டுநர் இருக்கையில் அடையாளம் தெரியாத வகையில் எலும்பு எச்சங்களாகக் கண்டுபிடிக்கப்பட்டன என்று நியூ மெக்சிகோ காவல்துறையினர் ஜூன் 19ஆம் திகதியன்று தெரிவித்தனர்.மேலும், இறந்த மற்றொருவர் 60 வயது மதிக்கத்தக்க ஆண் என அடையாளம் காணப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.

காட்டுத் தீயால் ஏற்பட்ட இரு தீச்சம்பவங்களில் 1,400க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமாயின என்றும் அவற்றில் 500 கட்டடங்கள் குடியிருப்புகள் என்றும் நியூ மெக்சிகோ ஆளுநர் மிச்செல் லூஜன் க்ரிஷாம் செய்தியாளர்களிடம் கூறியதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.

அம்மாநில வரலாற்றில் ஆகப் பெரிய அழிவை ஏற்படுத்திய காட்டுத்தீக்களில் இதுவும் ஒன்று என அவர் குறிப்பிட்டதாகக் கூறப்பட்டது.

காட்டுத் தீயால் 9,308 ஏக்கருக்கு மேலான நிலப்பரப்பு கருகி போனதால் இதைப் பேரழிவாக அறிவிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் நியூ மெக்சிகோ ஆளுநர் ஜூன் 19ஆம் திகதி வேண்டுகோள் விடுத்தார்.

Exit mobile version