Site icon Tamil News

ஆஸ்திரேலியாவில் நவீன அடிமைத்தனம்: இலங்கை இராஜதந்திரி ஒருவருக்கு பெரும் தொகை அபராதம்

தனது வீட்டில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு முறையாக சம்பளம் வழங்காத இலங்கை இராஜதந்திரி ஒருவருக்கு அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றம் பெரும் தொகை அபராதம் விதித்துள்ளது.

அத்துடன், குறித்த இராஜதந்திரி தொடர்பில் முறையாக ஆராயத் தவறியதாக உள்நாட்டலுவல்கள் திணைக்களத்தை நீதிமன்ற நீதிபதி கடுமையாக சாடியுள்ளார்.

வீட்டுப் பணிப்பெண்ணுக்கு 543,000 டொலர்களை சம்பளம் மற்றும் வட்டியாக செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், வேலைவாய்ப்புச் சட்டங்களை மீறியதற்காக பெரும் அபராதத்தையும் எதிர்நோக்கியுள்ளார்.

2015 முதல் 2018 வரை கன்பராவில் பணியாற்றிய அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராக பணியாற்றிய ஹிமாலி அருணதிலக, தனது ஊழியரான பிரியங்கா தனரத்னாவுக்கு அவுஸ்திரேலியாவில் இருந்த காலத்தில் ஊதியம் மற்றும் விடுமுறைகளை மறுத்துள்ளார்.

தனரத்னா வாரத்தில் ஏழு நாட்களும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பணிபுரிந்ததாகவும், இந்தக் காலப்பகுதியில் இரண்டு நாட்கள் மட்டுமே விடுமுறை வழங்கப்பட்டதாகவுமு் நீதிபதி கண்டறிந்தார்.

இந்த காலகட்டத்தில், குறித்த பெண்ணுக்கு மிகவும் குறைந்த சம்பளமே வழங்கப்பட்டதுடன், கன்பரா இல்லத்தில் இருந்து தனியாக வெளியேற அனுமதி மறுக்கப்பட்டதுடன், அவரது கடவுச்சீட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, ஹிமாலி அருணதிலகவிற்கு பெரும் தொகை பணம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஹிமாலி அருணதிலக தற்போது ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபைக்கான (ஐ.நா.) இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாக பணியாற்றுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version