Tamil News

காணாமல் போன 2 வயது குழந்தை…குளத்திலிருந்து சடலமாக மீட்பு – கொலையா என விசாரணை!

சென்னையில் வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த பெண் குழந்தை குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த மேடவாக்கம் காந்திநகர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி அபிநயா என்ற மனைவியும் இரண்டு வயதில் தன்ஷிகா என்ற பெண் குழந்தையும் இருந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தன்ஷிகா காணாமல் போனதால் பதற்றம் அடைந்த தாய் அபிநயா அக்கம் பக்கத்தில் குழந்தையை தேடி அலைந்துள்ளார்.

அப்போது வீட்டின் அருகில் உள்ள குளத்தில் குழந்தை தன்ஷிகா மயங்கிய நிலையில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனால் அபிநயா கூச்சலிட்டதை அடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து குழந்தையை மீட்டு மேடவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

குளம்

அங்கு தன்ஷிகாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் தகவல் அறிந்து பள்ளிக்கரணை பொலிஸார், சம்பவ இடத்திற்கு சென்று குழந்தை உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த பொலிஸார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குழந்தை தவறி குளத்தில் விழுந்து உயிரிழந்ததா அல்லது வேறு யாரேனும் தள்ளி விட்டார்களா என பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டருகே விளையாடி கொண்டிருந்த இரண்டு வயது பெண் குழந்தை குளத்தில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version