Site icon Tamil News

மனநல பிரச்சனைகள் ;பள்ளிகளில் கைப்பேசி பயன்பாட்டுக்கு எதிராக கலிஃபோர்னியா நடவடிக்கை

பள்ளிகளில் கைப்பேசி பயன்பாட்டைத் தடை செய்யும், கட்டுப்படுத்தும் சட்டத்தை அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலம் நடைமுறைப்படுத்தியுள்ளது.

கைப்பேசிகளை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் மனநலப் பிரச்சினைகள், கற்றல் குறைபாடுகள் ஆகியவை ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாகப் பல ஆய்வுகள் தெரிவித்துள்ளதை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மற்ற 13 மாநிலங்கள், பள்ளிகளில் கைப்பேசி பயன்பாட்டுக்குத் தடை, கட்டுப்பாடுகள் விதித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.மற்ற மாநிலங்களுக்கு முன்பாகவே ஃபுளோரிடா மாநிலம் இந்த நடவடிக்கையை 2023ஆம் ஆண்டில் மேற்கொண்டது.

சிகரெட் பொட்டலங்களில் சுகாதார எச்சரிக்கைகள் இருப்பது போலவே சமூக ஊடகத் தளங்களிலும் மனநலம் தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவின் தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் விவேக் மூர்த்தி கடந்த ஜூன் மாதம் அழைப்பு விடுத்தார்.

“கைப்பேசிகளை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும்போது பதற்றநிலை, மனஅழுத்தம், இதர மனநலப் பிரச்சினைகள் அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது. ஆனால் அதைத் தடுக்கும் ஆற்றல் நமக்கு உள்ளது.

“கல்வி, சமூக மேம்பாடு, நிஜ வாழ்க்கை ஆகியவற்றில் கவனம் செலுத்த புதிய சட்டம் மாணவர்களுக்கு உதவும்,” என்று கலிஃபோர்னியா ஆளுநர் கெவின் நியூசம் தெரிவித்தார்.

Exit mobile version