Tamil News

தரைமட்டமாக்கப்பட்டுள்ள தரவை மாவீரர் துயிலும் இல்லம்: ஏற்பாட்டாளர்கள் கடும் விசனம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபி வாழைச்சேனை பொலிஸாரின் துணையுடன் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் உடைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சந்திவெளி பகுதியில் மாவீரர் நினைவு வார நிகழ்வுகள் நடாத்துவதற்கு பொலிஸாரினால் தடையேற்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர்களுக்கு விளக்கு ஏற்றுவதற்காக அமைக்கப்பட்டிருந்த தூபி உடைக்கப்பட்டு அங்கிருந்த கட்டுமாணப்பொருட்கள் வனஜீவராசிகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களினால் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

வுன ஜீவராசிகள் திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் சட்டத்துக்கு முரணாக தூபி அமைக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினால் வாழைச்சேனை நீதிமன்றத்தின் கட்டளையை பெற்று குறித்த தூபி தகர்த்தெறியப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவித்தன.

இதேபோன்று இன்றைய தினம் சந்திவெளி பகுதியில் மாவீரர் தின ஆரம்ப நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த நிலையில் அப்பகுதியில் பெருமளவு பொலிஸாரும் புலனாய்வுத்துறையினரும் குவிக்கப்பட்டு நிகழ்வுக்கு தடையேற்படுத்தப்பட்டிருந்தது.

தரவை மாவீரர் தின ஏற்பாட்டுக்குழுவினால் இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த நிலையில் அங்கு குவிக்கப்பட்ட பொலிஸார் குறித்த நிகழ்வினை நடாத்தமுடியாது எனவும் அதனை மீறி நடாத்தினால் கைதுசெய்வோம் என அச்சுறுத்தியதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து மாவீரர்களின் குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு அவர்கள் அனுப்பிவைக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

குறித்த பகுதிக்கு வந்த பொலிஸாரும் புலனாய்வாளர்களும் அங்கிருந்தர்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தியுள்ளதுடன் ஈகச்சுடர் ஏற்றவும் பெனர்களை கட்டுவதற்கும் நிகழ்வினை நடாத்துவதற்கும் தடை விதித்ததாகவும் தெரிவித்தனர்.

Exit mobile version