Tamil News

பதுளையில் மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்றவர் கைது

பதுளையில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்ற நபர் ஒருவர் 1793 போதை மாத்திரைகளுடன் திங்கட்கிழமை (17) கைது செய்யப்பட்டதாக பல்கஹதென்ன விசேட அதிரடிப்படை முகாமின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பல்கஹதென்ன விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பதுளை மஹியங்கனை வீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது ஆவணங்களில் குறிப்பிடப்படாத 1355 மாத்திரைகள், வேறோரு வகையான 350 மாத்திரைகள் மற்றும் மறைத்து வைக்கப்பட்டிருந்த 88 மாத்திரைகள் ஆகியவை மருந்து கடையொன்றிலிருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பதுளை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக உணவு மற்றும் மருந்து பரிசோதகர்களிடம் ஒப்படைத்துள்ளதாக விசேட அதிரடிப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக பதுளை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் உணவு மற்றும் மருந்து பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version