Site icon Tamil News

பதிலடி கொடுக்கும் நோக்கில் லெபனான் மீது தாக்குதல் தொடுத்துள்ள இஸ்ரேல்

5வது நாளாக தொடரும் இஸ்ரேல் – ஹமாஸ் போர், இதர திசைகளிலும் வெடிக்கத் தொடங்கி உள்ளது. இந்த வகையில் ஹிஸ்புல்லாவின் புதிய ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக, தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா நிலைகளை குறிவைத்து இன்று(11) இஸ்ரேலிய விமானங்கள் தாக்குதல் தொடுத்தன.

இந்த வாரத்தின் தொடக்கத்தில் இஸ்ரேலிய ஷெல் தாக்குதலில் ஹிஸ்புல்லா அங்கத்தினர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இஸ்ரேலிய நிலைகள் மீது ஏவுகணைகளை வீசியதாக ஹிஸ்புல்லா அமைப்பு விளக்கமளித்தது. இதனையடுத்து, காஸா மீது தாக்குதல் தொடுத்து வரும் இஸ்ரேலிய துருப்புகள் லெபனான் நோக்கியும் திரும்பியுள்ளன.

அக்.7ம் திகதி அன்று இஸ்ரேல் மீதான ஹமாஸ் போராளிகளின் ராக்கெட் தாக்குதல்கள், காஸாவில் இருந்து மட்டுமன்றி, லெபனானின் ஹிஸ்புல்லா நிலைகளில் இருந்தும் பாய்ந்ததாக இஸ்ரேல் பின்னர் தெரிவித்தது.

இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் இன்னொரு திசையில் இருந்து ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் இணைந்திருப்பது, போரை மேலும் நீட்டிக்கவே செய்யும் என கணிக்ககப்படுகிறது. இஸ்ரேல் – லெபனான் மோதலில் இருதரப்பு உயிரிழப்புகள் குறித்த விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.

Exit mobile version