இலங்கையில் இந்திய நாணயத்தை செல்லுபடியாகும் நாணயமாக பயன்படுத்த அனுமதிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையில் பேச்சுவார்தை ஒன்று முன்னெடுக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கான விஜயத்தின் போது செய்துகொண்ட உடன்படிக்கைகள் தொடர்பில் இன்று (22.07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இந்திய விஜயத்தின் போது, பல துறைகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் எட்டப்பட்டதாக அமைச்சர் விளக்கினார்.
இதற்கு மேலதிகமாக, திருகோணமலை, கொழும்பு மற்றும் தென்னிந்திய துறைமுகங்களுக்கு இடையிலான தொடர்பை ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதன் முக்கியத்துவம் குறித்து இரு தரப்பினருக்கும் இடையில் முக்கியமாக கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
“இலங்கை அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டுமென்றால் முதலீடு அவசியம். அங்கு அரசுகளுக்கு இடையே மட்டுமின்றி தனியார் துறைகளுக்கும் இடையே ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதற்கு தேவையான பின்னணியை உருவாக்குவது குறித்து ஆலோசித்தோம் எனவும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
“இலங்கையில் டிஜிட்டல்மயமாக்கலை விரைவுபடுத்த இந்தியாவின் ஆதரவைப் பெறுவது குறித்து ஆராயப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.