Site icon Tamil News

பெண்கள் தலைமை பதவியை ஏற்க தயார் படுத்திக் கொள்வது எப்படி?

ஒரு நிறுவனத்துக்கு தலைமை அதிகாரியாக பொறுப்பு ஏற்பவருக்கு அந்த துறை குறித்த அனுபவம் மட்டும் இருக்கிறதா? அல்லது அனைத்து துறை சார்ந்த அனுபவம் உள்ளதா? என்று அறிய வேண்டும். அதாவது உற்பத்தி, விற்பனை, சந்தைப்படுத்துதல், நிதி, செயல்பாடு, தொழில்நுட்ப விவரங்கள் அவருக்கு தெரிந்திருக்க வேண்டும்.

நிறுவனத்தின் அனைத்து விஷயங்களையும் ஒருங்கிணைப்பவராக அவர் இருக்க வேண்டும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் நிறுவனத்தில் ஆதி முதல் அந்தம் வரை அனைத்தும் அவருக்கு தெரிந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட தொழில் குறித்து அவருக்கு போதிய அனுபவம் இல்லாது போனால் மிகவும் இக்கட்டான சந்தர்ப்பத்தில் அவரால் சரியான முடிவை எடுக்க முடியாது.

தலைமை அதிகாரியின் முக்கியமான வேலையே சிறந்தவர்களை நிறுவனத்திற்கு சேர்ப்பதுதான். ஒவ்வொரு துறை பற்றியும் அவருக்கு போதிய பரிச்சயம் இல்லையெனில் அந்த பிரிவில் திறமையானவர்களை அவரால் அடையாளம் காண முடியாமல் போகும்.

இதனால் அவர் தேர்வு செய்வோர் நிறுவன எதிர்பார்ப்புக்கு ஏற்றவராக நிச்சயம் இருக்க மாட்டார். இதனால் முக்கியமான பதவிக்கு பணியாளர்களைத் தேர்வு செய்வதில் தலைமை அதிகாரிகள் சில வழி முறைகளை பின்பற்ற வேண்டும் என்கிறார்கள், மேலாண்மை வல்லுனர்கள்.

மேலும் தலைமை அதிகாரியாக இருப்பவர் சிறந்த முறையில் கருத்துகளை பரிமாறிக் கொள்ளத் தெரிந்தவராக இருக்க வேண்டும். அவர் மூன்று வகையான பிரிவினருடன் அதாவது நிறுவனத்தின் பங்குதாரர், தொழிலாளர் மற்றும் வாடிக்கையாளர்களுடன் தகவல்களை பரிமாற வேண்டும்.

நிறுவனத்தின் எதிர்கால குறிக்கோள் குறித்து தனது பணியாளர்களுக்கு தெளிவாகத் தெரிவித்து இலக்கை எட்டுவதற்கு அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டுவதற்கான கொள்கைகளை வகுப்பவரே சிறந்த தலைமை அதிகாரியாக இருக்க முடியும்.

நிறுவன இலக்கை எட்டுவதில் அனைத்து பணியாளர்களும் குழுவாக செயல்பட வேண்டும். இதை ஒவ்வொரு கட்டமாக நிறைவேற்ற வேண்டும். இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பிறகு அதை எப்படி செயல்படுத்தப் போகிறோம் என்பதை விரிவாக பேச வேண்டும். மணிக்கணக்கில் பேசுவதைக் காட்டிலும், அதை ஒரு சில மணி நேர செயல்பாடுகளில் நிரூபிக்கலாம். அதன் மூலம் எது சரி அல்லது எது தவறு என்பதை உணர்த்த முடியும்.

நிறுவனத்தின் கொள்கைகளுக்கு விரோதமாக, கீழ்ப்படியாமல் நடப்பவர்களை வெளியேற்ற தயக்கம் காட்டக் கூடாது. ஊழியர்களை வெளியேற்றுவது என்பது மிகவும் இக்கட்டான தருணம் தான். இந்த விஷயத்தில் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். தகுதி வாய்ந்த நபர்கள் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டு விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.

Exit mobile version