Site icon Tamil News

ஹரியாணா – திடீரென இடிந்து விழுந்த தகன மேடை சுற்றுச்சுவர்… சிறுமி உட்பட 4 பேர் பலி!

ஹரியாணாவில் தகன மேடை சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்த சம்பவத்தில் சிறுமி உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியாணா மாநிலம் குருகிராம் அருகே அர்ஜுன் நகர் பகுதியில் எரியூட்டு மயானம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. மயானத்தில் சடலங்களை எரிப்பதற்காக பயன்படுத்தப்படும் மரக்கட்டைகள் சுற்றுச்சுவர் அருகே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் நேற்று மாலை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் சுற்றுச்சுவர் அருகே அமர்ந்து கொண்டு இருந்தனர்.

அப்போது திடீரென சுற்றுச்சுவர் சரிந்து விழுந்து விபத்திற்கு உள்ளானது. இதில் இடிபாடுகளில் சிக்கி 11 வயது தான்யா என்ற சிறுமி, 70 வயது தேவி தயாள், 54 வயது மனோஜ் காபா, 52 வயது கிருஷ்ணகுமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனால் பதறிய அருகில் இருந்தவர்கள் உடனடியாக இடுப்பாடுகளை அகற்றி உள்ளே சிக்கி இருந்த நால்வரது உடல்களையும் மீட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படுகாயம் அடைந்த தீபா பிரதான் என்பவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அடுக்கி வைக்கப்பட்டிருந்த மரக்கட்டைகளின் பாரம் காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது

Exit mobile version