Site icon Tamil News

கானா – கட்டண பாக்கி வைத்ததால் பாராளுமன்றத்தில் தடைப்பட்ட மின்சாரம் – லிஃப்டில் சிக்கிய உறுப்பினர்கள்!

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு, கானா, இதன் தலைநகரம் அக்ரா.அந்நாட்டு பாராளுமன்றத்தில் அதிபர் நானா அகுஃபோ–அட்டோ நாட்டு மக்களுக்கு உரையாற்றி கொண்டிருந்தார்.அப்போது பாராளுமன்றத்தில் மின்சாரம் தடைபட்டது. உடனடியாக மின்சாரம் திரும்பும் என நினைத்து உறுப்பினர்கள் அமர்ந்திருந்த நிலையில், மின்சாரத்தடை நீடித்தது.

இதையடுத்து அங்கிருந்து உறுப்பினர்கள் அனைவரும் அக்கன் மொழியில் “மின்சார தடை” எனும் பொருள்பட “டம்சர், டம்சர்”என கோஷமிட தொடங்கினர்.சில நிமிடங்கள் கடந்ததும், உறுப்பினர்கள் அமர்ந்திருந்த சபைக்கு மட்டும் ஜெனரேட்டர் உதவியுடன் மின்சார சேவை மீண்டும் தொடர்ந்தது.ஆனால், மின்சார சேவை பாராளுமன்றத்தின் பிற பகுதிகளுக்கு வரவில்லை. இதனால் லிஃப்டில் பயணித்த பல உறுப்பினர்கள் அதிலேயே சிக்கிக் கொள்ள நேர்ந்தது.

“பாராளுமன்ற அலுவலகம் செலுத்த வேண்டிய மின்கட்டண பாக்கியை வசூலிக்க பல முறை நோட்டீஸ் அனுப்பியும் கட்டணத்தை செலுத்தாததால் மின் தொடர்பை துண்டித்தோம். மின் தடை என்பது கட்டணம் செலுத்தாத அனைவருக்கும்தான். கட்டணம் செலுத்தாதவர்கள் யாராக இருந்தாலும் மின்சார சப்ளை துண்டிக்கபப்டும்” என எலக்ட்ரிசிட்டி கம்பெனி ஆஃப் கானா (ECG) எனும் அந்நாட்டு மின்சார நிறுவன செய்தித் தொடர்பாளர் வில்லியம் போடெங் தெரிவித்தார்.

நாளின் பிற்பகுதியில் கட்டணத்தின் ஒரு பகுதியை செலுத்திய பிறகே மின் தொடர்பு மீண்டும் வழங்கப்பட்டது.கானா அரசு மின்சார துறைக்கு $1.8 மில்லியன் அளவிற்கு கட்டண பாக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.கடும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக அந்நாட்டின் அனல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருளை வாங்க கானா அரசால் முடியவில்லை.

Exit mobile version