Site icon Tamil News

இறுதிக்கட்டத்தில் காஸா போர் நிறுத்தம், பிணைக்கைதி விடுதலை உடன்பாடு

காஸாவில் சண்டைநிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையும் பிணைக் கைதிகளை விடுவிப்பதற்குமான உடன்பாடும் ‘இறுதிக்கட்டத்தில்’ இருப்பதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் புதன்கிழமை (ஜூலை 24) தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவும் வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை சந்திக்கவிருந்த நிலையில் இத்தகவல் வெளியாகியுள்ளது.

நெட்டன்யாகு உடனான பேச்சுவார்த்தையின்போது சில வேறுபாடுகளைக் களைய பைடன் முற்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.எனினும், பிணைக் கைதிகளின் விதி உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் ஹமாஸ் அமைப்பின் கையிலேயே உள்ளது என அந்த மூத்த நிர்வாக அதிகாரி கூறினார்.

“பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். அதுகுறித்த உடன்பாடு நிறைவேற்றப்படலாம்,” என்று பெயர் குறிப்பிட விரும்பாத அவர் சொன்னார்.

நீண்டநாள் எதிர்பார்க்கப்படும் உடன்பாட்டை எட்டுவதில் வரும் வாரத்தில் ‘அதிக நடவடிக்கைகள்’ இடம்பெறும் என்று குறிப்பிட்ட அந்த அதிகாரி, “அந்த உடன்பாடு சாத்தியமானது மட்டுமன்று, அது அவசியமானதும் தேவையானதும்கூட,” என்று சொன்னார்.

காஸாவிலிருந்து இஸ்ரேலியப் படையினர் முழுமையாக மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஹமாஸ் தளர்த்தியுள்ள வேளையில், இப்போது ஓர் உடன்பாடு எவ்வாறு நடைமுறைக்கு வரும் என்பதில் ஒரு சில விவகாரங்களைச் சார்ந்தே சண்டைநிறுத்தம் உள்ளதாக அந்த அதிகாரி சொன்னார்.

“ நெட்டன்யாகு உடனான சந்திப்பு, ஆமாம் அல்லது இல்லை என்பது பற்றியதாக இருக்கும் என நான் எதிர்பார்க்க மாட்டேன். ‘கடைசிக்கட்ட வேறுபாடுகளைக் களைவது எப்படி?’ என்பது பற்றியதாக அது இருக்கும். இஸ்ரேலியத் தரப்பிலிருந்து எங்களுக்குத் தேவையான சில அம்சங்கள் உள்ளன.“ஆனாலும், சில அம்சங்கள் ஹமாஸ் கைகளிலேயே உள்ளன. ஏனெனில், பிணைக் கைதிகள் ஹமாஸிடம் உள்ளனர்,” என்றார் அந்த அதிகாரி.

இந்நிலையில் இஸ்ரேல், காஸா மீதான அமெரிக்காவின் கொள்கையில் பைடனும் துணை அதிபர் கமலா ஹாரிசும் முற்றிலும் உடன்பட்டிருப்பதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

Exit mobile version