Site icon Tamil News

நேபாளத்தில் இலங்கையர்களை பிணைக் கைதிகளாக வைத்திருந்த நான்கு பாகிஸ்தானியர்கள் கைது

வேலைக்காக பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி இலங்கை பிரஜைகள் நால்வரை பணயக் கைதிகளாகக் கைப்பற்றிய நான்கு பாகிஸ்தானியர்கள் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நேபாள காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நேபாள காவல்துறையின் காத்மாண்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வியாழக்கிழமை (04) கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நான்கு பாகிஸ்தானியர்களை கைது செய்ததாக  தெரிவித்துள்ளனர்.

42 வயதுக்கும் 62 வயதுக்கும் இடைப்பட்ட பாகிஸ்தானிய பிரஜைகள், கனடா, ருமேனியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வேலை வழங்குவதாக பொய்யான வாக்குறுதியை அளித்து இலங்கை பிரஜைகள் நால்வரிடம் இருந்து மில்லியன் கணக்கான ரூபாவை வசூலித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சொந்த நாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட இலங்கையர்கள், பாகிஸ்தானியர்களால் தாக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டனர், அச்சுறுத்தப்பட்டனர்.

காத்மாண்டுவில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் பாகிஸ்தானியர்கள் அவர்களை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றதால் அவர்களது பாஸ்போர்ட்டுகளும் கைப்பற்றப்பட்டன.

அவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நான்கு பாகிஸ்தானியர்கள் மீது கடத்தல் மற்றும் மனித கடத்தல் தொடர்பான செயல்களில் குற்றம் சாட்டப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version