Site icon Tamil News

இலங்கை தொடர்பில் சர்வதேச நிதி நிறுவனங்களின் கணிப்பு – ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

இலங்கையின் பொருளாதாரம் 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இருந்து மீள் எழுச்சி பெற ஆரம்பித்ததாகவும் 2024 ஆம் ஆண்டில் 2% – 3% பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என சர்வதேச நிதி நிறுவனங்கள் கணித்துள்ளது.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டு அரச வருவாயை 50 சதவீத்திற்கும் மேல் அதிகரிக்க முடிந்ததாகவும் கடந்த வருடம் முதன்மைக் கணக்கில் உபரியைப் பெற முடிந்ததாகவும் தெரிவித்த ஜனாதிபதி, இதன்மூலம் மூன்று முதல் நான்கு ஆண்டுகளாக அரசாங்கத்திற்கு சேவை வழங்கிய ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மத்திய வங்கி மற்றும் அரசாங்கம் ஆகியன ஒருங்கிணைந்து மேற்கொண்ட நுண் பொருளாதார கேள்வி முகாமைத்துவ முன்முயற்சியின் காரணமாக 2022 செப்டம்பரில் 70% ஆக இருந்த பணவீக்கம் 2024 பெப்ரவரியில் 5.9% ஆக வீழ்ச்சியடைந்தது.

இதன் காரணமாக சிறு மற்றும் மத்திய தொழில்முயற்சியாளர்களுக்கும் நுகர்வோருக்கும் நிவாரணம் வழங்கி 30 வீதத்தை தாண்டிய வரி வீதத்தை 2023 இல் 10 சதவீதத்தை விட குறைவான தொகைக்குக் கொண்டுவந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் நடுப்பகுதியில் 20 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்குக் குறைவாக இருந்த பயன்படுத்தக்கூடிய அந்நியச் செலாவணி கையிருப்பு தற்போது 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை விட அதிகமாக அதிகரித்துள்ளதாகவும் தனியார் மோட்டார் வாகனங்கள் தவிர்ந்த ஏனைய இறக்குமதித் தடைகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

Exit mobile version