Tamil News

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி நாளை ஆரம்பம்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி நாளை (06.09.2023) காலை 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாய் பகுதிக்கு இன்று மாலை விஜயம் மேற்கொண்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி த.பிரதீபன், தொல்பொருள் சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன், சட்டத்தரணிகளான ரணித்தா ஞானராசா, வி.கே.நிறஞ்சன், கொக்குளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தடயவியல் பொலிஸ் பொறுப்பதிகாரி, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் உள்ளிட்ட தரப்பினர் இடத்தை பார்வையிட்டு கலந்துரையாடி இருக்கின்ற வளங்களுடன் நாளை காலை 7.30 மணிக்கு ஆரம்பிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ சீரற்ற காலநிலை காரணமாக இன்றையதினம் ஆரம்பிக்கப்பட இருந்த மனித புதைகுழி அகழ்வு பணியானது நாளை (06.09.2023) காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகும் என தெரிவித்தார்.

அகழ்வு பணிகள் எவ்வளவு காலம் இடம்பெறும் என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு ஏற்கனவே 13 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எப்போது நிறைவடையும் என்பது பற்றி தற்போது கூறமுடியாது அகழ்வு பணி தொடர்ந்து நடக்கும் பட்சத்தில் எவ்வளவு காலம் நடைபெறும் , எத்தனை இருக்கும் என்பது தொடர்பாக கூற முடியும் என மேலும் தெரிவித்தார்.

Exit mobile version